மாதம் ரூ80,000 டெலிபோன் பில்-ரூ1,00,000 கரண்ட் பில்;470 முறை விமான பயணம்... ரோசய்யாவின் செலவு இது!
சென்னை: தமிழக ஆளுநராக ரோசய்யா பதவி வகித்த 4 ஆண்டுகாலத்தில் ஒரு மாதத்துக்கு ரூ80,000 அளவுக்கு டெலிபோன் பில்லும் 20,000 யூனிட் மின்சாரமும் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்கள் பெறப்பட்டுள்ளன.
தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யாவின் பதவிக் காலம் கடந்த 31-ந் தேதியுடன் முடிவடைந்தது. கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் ரோசய்யா ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் மத்தியில் பாஜக ஆட்சியில் அமர்ந்த போது பல மாநில ஆளுநர்கள் மாற்றப்பட்ட போதும் ரோசய்யா மாற்றப்படவில்லை. கடந்த மாதம் 31-ந் தேதியுடன் அவரது பதவிக் காலம் முடிவடைந்தது. அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால் மத்திய அரசு அவரை விடுவித்து பொறுப்பு ஆளுநராக மகாரஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவை நியமித்துள்ளது.
சீரமைப்புக்கு ரூ1.27 கோடி
இதனிடையே கடந்த 4 ஆண்டுகளில் ரோசய்யா எவ்வளவு செலவு செய்திருக்கிறார் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன் தகவல்களைப் பெற்றிருந்தார். அவர் பெற்றிருந்த விவரங்கள்:
ராஜ்பவனில்தான் ஆளுநர் அலுவலகம், வீடு, ஊழியர்களுக்கான அலுவலகம் மற்றும் குடியிருப்புகளைப் பராமரிக்கவும் சீரமைக்கவும் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.1.27 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2011 ஆகஸ்ட் முதல் 2015 மே வரை மின்கட்டணமாக ரூ.36.24 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.
ரூ1லட்சம் மின் கட்டணம்
மாதம் ஒன்றுக்கு சுமார் 20,000 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. சராசரியாக மாதம் ரூ1,00,000 ரூபாயை மின்கட்டணமாகச் செலுத்தி உள்ளனர்.
ரூ1 கோடிக்கு வாகனங்கள்
மெர்சடைஸ் பென்ஸ், ஸ்கோடா சொகுசு கார்கள் உட்பட 4 கார்கள், ஒரு மோட்டார் பைக் கடந்த 4 ஆண்டுகளில் புதிதாக வாங்கப்பட்டு இருக்கின்றன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ1 கோடி.
மாதம் ரூ80,000 டெலிபோன் பில்
4 ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட தொலைபேசிக் கட்டணம் சுமார் ரூ36,00,000. மாதம்தோறும் ரூ80,000 அளவுக்குப் பேசப்பட்டுள்ளது.
470 முறை விமான பயணம்
ஆளுநரின் பயணத்துக்கு ரூ.1.22 கோடி செலவாகியிருக்கிறது. இதில் உள்நாட்டுப் பயணச் செலவு ரூ.1.20 கோடி. 470 முறை விமானங்களில் பறந்திருக்கிறார் ரோசய்யா.
85% தனியார் விழாக்கள்
1,400-க்கும் மேற்பட்ட விழாக்களில் பங்கேற்றுள்ளார். இதில் அரசு விழாக்கள் 15% மட்டுமே. 85% அளவுக்குத் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார். தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அரசுக்குச் சொந்தமான ஹெலிகாப்டர், கார்கள் உள்ளிட்ட வாகனங்களைப் பயன்படுத்தியிருக்கிறார் ரோசய்யா.