தமிழக மக்களின் அன்பை என்னுடன் எடுத்துச் செல்கிறேன்.. ரோசய்யா உருக்கம்
சென்னை: கடந்த 5 ஆண்டு காலம் தமிழக ஆளுநராக இருந்தபோது என் மீது தமிழக மக்கள் காட்சிய அன்புக்கும், பாசத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்களின் அன்பை என்னுடன் எடுத்துச் செல்கிறேன் என்று கூறியுள்ளார் தமிழக ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள கே. ரோசய்யா.
ஆந்திர மாநில முதல்வராக இருந்தவர் ரோசய்யா. பல காலம் ஆந்திர நிதியமைச்சராக திறம்பட செயல்பட்டவரும் கூட. மூத்த காங்கிரஸ்வாதியான ரோசய்யா தமிழக ஆளுநராக கடந்த ஐந்து ஆண்டுகள் பதவியில் இருந்தார். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஆளுநரான அவருக்கு தற்போதைய பாஜக ஆட்சியில் பதவி நீட்டிப்பு தரப்படவில்லை. இதையடுத்து நேற்று அவர் ஓய்வு பெற்றார்.
இதையடுத்து தமிழக மக்களுக்கு நன்றி கூறி அறிக்கை விடுத்துள்ளார் கே. ரோசய்யா. அவரது அறிக்கை:
மிகப் பெரிய கவுரவம் - பெருமை
கடந்த 5 ஆண்டுகளாக தமிழக கவர்னராக நான் பனியாற்றியது எனக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவமும், பெருமையும் ஆகும். எனது பதவி காலம் மற்றும் தமிழக மக்கள் என் மீது காட்டிய பாசத்தையும், பொழிந்த அன்பையும் என்னுடன் எடுத்து செல்கிறேன். தமிழகம் மிக வேகமான வளர்ச்சியில் பீடுநடைபோடுகிறது.
உழைப்புக்குப் பெயர் போன தமிழகம்
முன்னணி மாநிலங்களில் ஒரு மாநிலமாக இருக்கிறது. இந்தியாவில் கலாசாரத்தின் தலைநகராக விளங்குகிறது தமிழகம். இங்குள்ள தரம் வாய்ந்த உயர் கல்விகளில் அமைதியை விரும்பும் மற்றும் கடின உழைப்புக்கு பெயர் போன மக்களாலும் இது ஒரு கல்வி மையமாக திகழ்கிறது.
உயர் கல்வியில் பல திட்டங்கள்
பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் கல்வி தரத்தை மேலும் வலுப்படுத்த எல்லா முயற்சிகளையும் எடுத்துள்ளேன். எதிர்கால சந்ததியர்கள் ஆகிய மாணவர்களிடையே தன்னம்பிக்கை, உத்வேகத்தை மேம்படுத்தும் வகையில் ஆராய்ச்சியில் புதுமை, யோகா மற்றும் தியானம் போன்ற பல திட்டங்கள் உயர்கல்வியில் அறிமுகப்படுத்த நான் காரணமாக இருந்திருக்கிறேன்.
ஜெயலலிதாவுக்குப் பாராட்டு
முதல்வர் ஜெயலலிதா, அவரது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள், அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், முன்னாள், இந்நாள் துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், பல்வேறு தன்னார்வ மற்றும் சமூக சேவை நிறுவனங்கள், வர்த்தக சபையினர், நண்பர்கள், ஊடகங்கள், கவர்னர் மாளிகை அலுவலர்கள், ஊழியர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக மக்களுக்கு அன்பும், நன்றியும்
தமிழக மக்களின் அன்புக்கும், பாசத்துக்கும் நான் மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் கவர்னராக இருந்த போது என் மீது காட்டிய அன்புக்கு பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழக மக்களுக்கு எனது நல்வாழ்த்துகள். எப்போதும் அவர்களுக்காக நான் பிரார்த்தனை செய்வேன் என்று கூறியுள்ளார் ரோசய்யா.