கன்னியாகுமரி கடலில் திடீர் சீற்றம்... படகு சவாரி ரத்து, மீனவர்கள் பீதி
கன்னியாகுமரியில் இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக கடல் சீற்றம் ஏற்பட்டது. மேலும் பயங்கர சூறை காற்றும் வீசியது.
சுமார் 10 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பியதால் கடலில் இறங்கி குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகளும், சபரிமலை செல்வதற்கு வந்த பக்தர்களும், தரிசனம் முடிந்த திரும்பிய பக்தர்களும் அலறி அடித்து கடற்கரை பகுதியில் இருந்து மேட்டு பகுதிக்கு விரைந்தனர். தொடர்ந்து கடல் சீற்றம் இருந்து கொண்டே இருந்ததால் யாரும் கடலில் இறங்கி குளிக்க போலீசார் அனுமதி்க்கவில்லை.
மேலும் விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. மேலும் அங்கிருந்த படகுகளும் அவசரமாக திருப்பி அழைக்கப்பட்டன. அனைத்து படகு சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் பாறைக்கும் படகில் பயணம் செய்வதற்காக காலை முதலே டிக்கெட் வாங்கி வரிசையில் காத்திருந்த சுறறுலா பயணிகள் பலத்த அலை சீற்றம் காரணமாக படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற வண்ணம் இருக்கின்றனர்.
கன்னியாகுமரியை சுற்றியுள்ள கடற்கரை கிராமங்களான ஆரோக்கியபுரம், கோவளம், புதுக்கிராமம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் இதே நிலை நீடிப்பதால் மீனவர் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் கரையில் அச்சத்துடன் கடலையே பார்த்து கொண்டிருக்கின்றனர். இதனால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.