ரவுடின்னு சொன்னாங்க... போலீசிடம் சிக்கியதும் குய்யோ முறையோன்னு கூப்பாடு போட்ட சுவாரசியம்!
சென்னை அருகே பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கைது செய்யப்பட்ட ரவுடிகள், போலீசாரிடம் அழுது தங்களை விட்டுவிடும்படி கெஞ்சும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன
Recommended Video
சென்னை: பிரபல ரவுடி பினுவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துக்கொண்ட போது கைது செய்யப்பட்ட ரவுடிகள், தங்களை விட்டு விடும்படி போலீசாரிடம் கெஞ்சும் வீடியோக்கள் வெளியாகியுள்ளது
இதுவரை இல்லாத வகையில் போலீசார் ஒரே நேரத்தில் அதுவும் ஒரே இடத்தில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்துள்ளது பெரும் பரபரப்பாக தற்போது பேசப்படுகிறது. இந்நிலையில் அங்கிருந்து தப்பியோடிய ரவடிகளையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
எதிர்பாராத விதமாக நடைபெற்ற இந்த கைது சம்பவத்தில் போலீசார் சினிமா பாணியில் துரிதமாக செயல்பட்ட தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
பள்ளிக்கரணையில் சோதனை
சென்னை பள்ளிக்கரணை பகுதியில் நேற்று இரவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே தாம்பரம் நோக்கி அதிவேகத்தில் சென்ற பைக்கை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். அந்த நபர்கள் பூவிருந்தவல்லி அருகே மலையம்பாக்கம் என்ற இடத்தில் பண்ணை வீட்டில் நடக்கும் தங்களின் நண்பர் பினுவின் பிறந்த நாள் விழாவுக்குச் செல்வதாகக் கூறியுள்ளனர்.
பிரபல ரவுடி பினு
சூளைமேடு பகுதியைச் சேர்ந்த பினு என்பவர் ஏற்கனவே தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். பினு பிரபல ரவுடி என்பதும், பல கொலை வழக்குகளில் தொடர்புடையவர் என்பது போலீசாருக்கு தெரிந்ததால், இளைஞர்கள் அந்த பெயரை கூறியவுடனே அவர்கள் உடனே சுதாரித்துக்கொண்டனர்.
போலீஸ் படை விரைந்தது
இளைஞர் அளித்த தகவலை தொடர்ந்து காவல் ஆய்வாளர் சிவக்குமார் இவ்விவகாரம் தொடர்பாக அம்பத்தூர் துணை ஆணையாளர் சர்வேஸ்ராஜூக்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து மாங்காடு, குன்றத்தூர், பூந்தவல்லி, நசரத்பேட்டை, போரூர் மற்றும் எஸ்ஆர்எம்சி காவல் நிலையங்களில் உள்ள காவலர்களை உஷார்படுத்தப்பட்டனர்.
ரவுடிகள் சிதறி ஓட்டம்
இதனை தொடர்ந்து 60க்கும் மேற்பட்ட போலீசார் வாடகை வாகனங்களில் மலையம்பாக்கம் பகுதியைச் சுற்றி வளைத்தனர். அப்போது அங்குள்ள பண்ணை வீட்டில் ஒரே இடத்தில் 120க்கும் மேற்பட்ட ரவுடிகள் கூடியிருந்ததைக் கண்ட காவலர்கள் அங்கு அதிரடியாக நுழைந்தனர். இதனை கண்ட 50க்கும் மேற்பட்ட ரவுடிகள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
வாகனங்கள் பறிமுதல்
பண்ணை இல்லத்திற்குள் அதிரடியாக நுழைந்த போலீசார் 72 ரவுடிகளை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். இதில் பலர் அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்ததை தொடர்ந்து போலீசார், அவர்களை செமையாக கவனித்து கைது செய்தனர். மேலும் 120க்கும் மேற்பட்டோர் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துக்கொண்டதால் அவர்களின் பைக்குகள், கார்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்
கதறி அழுத ரவுடிகள்
பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்த பல ரவுடிகள் போலீசாரை பார்த்தவுடன் வெளவெளத்து போய் ஒரு கட்டத்தில் அழ ஆரம்பித்து விட்டனர். தன்னுடைய நண்பன் பிறந்தநாள் கொண்டாட்டம் என்று அழைத்து வந்து விட்டதாகவும், எனக்கு பினு யார் என்றே தெரியாது என்று ரவுடிகள் சிலர் அழுவதை பார்த்து போலீசார் ஒரு கட்டத்தில் சிரிக்க ஆரம்பித்தனர். எனென்றால் அழுத ரவுடிகளின் பெயரில் பல வழக்குகள் நிலுவையில் இருப்பது போலீசாருக்கு தெரியும். மேலும் அவர்களிடமிருந்து அரிவாள், துப்பாக்கி ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன
ரவுடிகள் சாலையோரம் பதுங்கல்
போலீசார் வருவதை அறிந்த ரவுடிகள் அருகே இருந்த சாலை பாலம் அடியில், முட்புதர் என்று பதுங்க ஆரம்பித்தனர். மேலும் அருகே இருந்த வீட்டிற்குள்ளும் அவர்கள் நுழைந்து பதுங்க ஆரம்பித்தால் அப்பகுதியினரே ரவுடிகளை அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்
போலீசார் - வழக்கறிஞர்கள் உடன்பாடு
பினுவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்துக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை போலீசார் எந்த வழக்கறிஞரையும் கைது செய்ததாக கணக்கில் காட்டவில்லை. ரவுடிகள் கைதோடு வழக்கறிஞர்களை கைது செய்த போலீசார், அவர்கள் வழக்கறிஞர்கள் என்று தெரிந்தவுடன் இருதரப்பினருக்கும் இடையே உடன்பாட்டில் அவர்களை கணக்கில் காட்டவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது
தப்பியோடிய ரவுடிகள்
தப்பி ஓடிய ரவுடிகளை தேடும் பணியில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. சிக்கிய ரவுடிகளிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் ஒரே நேரத்தில் சிக்கியிருப்பது காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பினுவும் உடந்தையா?
இந்த அதிரடி கைது சம்பவத்தில் ரவுடி பினு என்ன ஆனார் என்பது குறித்து போலீசார் இதுவரை தகவல் வெளியிடவில்லை. இந்த அதிரடி கைதுகளை போலீசார் புலன்விசாரணையின் மூலமாக நடத்தியதாக கூறப்பட்டாலும், பினுவுடன் போலீசார் ரகசியமாக பேசி அனைத்து ரவுடிகளையும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வரவழைத்து இந்த கைது ஆபரேஷனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது