என்கவுன்டர் பீதி.. ரவுடி ஆனந்தனின் கூட்டாளி புலி அருண் தற்கொலை முயற்சி!
சென்னையில் ரவுடி ஆனந்தன் என்கவுன்டர் செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது கூட்டாளி புலி அருண் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
சென்னை: சென்னையில் ரவுடி ஆனந்தன் என்கவுன்டர் செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது கூட்டாளி புலி அருண் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். 22 வயதான இவர் மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி என 12 வழக்குகள் நிலுவையில் இருந்தன.
கடந்த திங்கள் கிழமை ராயப்பேட்டை பகுதியில் கூட்டாளிகளுடன் பெண்களை கேலி செய்துள்ளார். தகவல் அறிந்த போலீசார் சிலர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
காவலருக்கு வெட்டு
அப்போது, காவலர் ராஜவேலுவை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு எஸ்கேப்பானார் ஆனந்தன். இதில் ராஜவேலுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அப்போது காவல்துறையினர் ஆனந்தனை விரட்டி பிடித்தனர். ஆனால் அவர்களை தாக்கிவிட்டு, வாக்கி டாக்கியையும் ஆனந்தன் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
ஆனந்தன் பதுங்கல்
இதையடுத்து ராஜவேலுவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த போலீசார், ஆனந்தனை தேடி வந்தனர். நேற்று முன்தினம் இரவு, அடையாறு மத்திய கைலாஷ் பகுதியிலுள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் அருகே கூட்டாளிகளுடன் ஆனந்தன் பதுங்கியிருந்தது தெரியவந்தது.
ஆனந்தன் என்கவுன்டர்
அப்போது அவரை போலீசார் சுற்றி வளைத்தனர். ஆனால் மீண்டும் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட ஆனந்தன் முயன்றார். எனவே போலீசார் தற்காப்புக்காக ஆனந்தனை சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே ஆனந்தன் பலியானார்.
மேலும் பலருக்கு குறி?
சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நடந்த இந்த என்கவுன்டரால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மேலும் பலரை என்கவுன்டரில் போட போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
புலி அருண் தற்கொலை முயற்சி
இந்நிலையில் ரவுடி ஆனந்தனின் கூட்டாளி புலி அருண் என்பவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்கொலைக்கு முயன்ற அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் தன்னையும் என்கவுன்டரில் கொன்றுவிடுவார்கள் என்ற அச்சத்தில் அவர் தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது.