நான் அவ்வளவு பெரிய ரவுடி இல்லை திருந்தி வாழ ஆசைப்படுகிறேன்... பினு கதறல் வீடியோ ரிலீஸ்!
நான் அவ்வளவு பெரிய ரவுடி இல்லை என்னை மன்னித்து விட்டுவிடுங்கள் திருந்தி வாழ ஆசைப்படுகிறேன் என்று ரவுடி பினு வாக்குமூலம் அளித்துள்ளான்.
Recommended Video
சென்னை: போலீசில் சரணடைந்துள்ள ரவுடி பினு தான் திருந்தி வாழ ஆசைப்படுவதாக கண்ணீருடன் கெஞ்சும் வீடியோ வெளியாகியுள்ளது. என்கவுண்டர் செய்ய நினைக்கும் அளவுக்கு தான் பெரிய ரவுடி இல்லை என்றும் தன்னை மன்னித்து விட்டுவிடுமாறும் பினு கேட்டுக்கொண்டுள்ளான்.
சென்னை மலையம்பாக்கத்தில் பிரம்மாண்டாக பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி பினு தலைமறைவாக இருந்த நிலையில், சென்னை அம்பத்தூர் போலீஸ் முன்பு பினு போலீசில் சரணடைந்துள்ளான். சரணடைவதற்கு முன்னர் பினு பதிவு செய்திருந்த வீடியோ வாக்குமூலம் தற்போது வெளியாகியுள்ளது.
வீடியோ வாக்குமூலத்தில் பினு கூறியதாவது : என்னுடைய பெயர் பினு, நான் சென்னை சூளைமேட்டில் வளர்ந்தேன். எனக்கு வயது 50 ஆகிறது, நான் சர்க்கரை வியாதி நோயாளி. நான் நண்பர்களுடன் சேர்ந்து நிறைய ரவுடித் தனம் செய்துவிட்டேன், அதனால் நிறைய ஜெயில் தண்டனையை அனுபவித்துவிட்டேன்.
ஜெயில் வாழ்க்கை போதும்
நான் ஜெயிலில் இருந்தது போதும் என்று திருந்தி வாழத் தான் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தேன். என் தம்பிக்கு மட்டுமே நான் இருக்கும் இடம் தெரியும். என்னுடைய தம்பி தான் சென்னைக்கு வரவழைத்தான் அதை நம்பியே நான் வந்தேன்.
பிறந்தநாள் ஏற்பாடு பற்றி தெரியாது
வந்த இடத்தில் எனக்கு பிறந்தநாள் கொண்டாடுவதாக மற்ற ரவுடிகள் அனைவரும் ஒரே இடத்தில் கூடி இருந்தனர். எல்லாரும் வந்து என்னை பார்த்த போது கூட இதுவெல்லாம் தேவையா என்று கேட்டேன், அதற்கு அவர்கள் இல்லை கேக் வெட்டும் கொண்டாட்டம் மட்டும் தான் என்று சொன்னார்கள்.
போலீஸ் சுற்றி வளைத்தது
அவன் கத்தியை கொடுத்தான், நானும் வாங்கி கேக்கை வெட்டினேன். அப்போதே போலீஸ் ரவுண்ட் அப் செய்துவிட்டது. என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை, அதனால் கால்வாயில் குதித்து தப்பி ஓடிவிட்டேன். என்னை சென்னை போலீஸ் துரத்திக் கொண்டே வந்தனர்.
திருந்தி வாழ விரும்புகிறேன்
நீங்கள் நினைப்பது போல நான் அவ்வளவு பெரிய ரவுடி எல்லாம் கிடையாது. என்னை என்கவுண்டர் செய்ய போலீஸ் திட்டமிடுகிறது, வேறு வழியில்லாமல் நானே வந்து சரணடைந்திருக்கிறேன். என்னை மன்னித்து இந்த முறை விட்டுவிடுங்கள் என்று பினு கண்ணீர் விட்டு கதறுகிறான். போலீசில் சரணடைவதற்கு முன்னர் பினு இந்த வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளான்.
கண்ணீருடன் கெஞ்சல்
இது தற்போது போலீசில் சரணடைந்த நிலையில் பினுவின் வாக்குமூல வீடியோ வெளியாகியுள்ளது. கத்தி வைத்து ஜாலியாக பிறந்தநாள் கொண்டாடிவிட்டு தற்போது கண்ணீர் நாடகமாடும் பினு தான் கொல்லப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் செய்திருக்கும் வேலையா இது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஏராளமான வழக்குகள்
போதைப்பொருள் கடத்தல், ஆள்கடத்தல் மற்றும் 3 கொலை வழக்குகள் என பினு மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. கடந்த 2ம் தேதி மலையம்பாக்கத்தில் ரவுடிகள் கொண்டாடிய பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பாகவும் பினு மீது வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.