பினுவின் மற்றொரு கூட்டாளி வினோத் சென்னையில் கைது... துருவி துருவி விசாரிக்கும் போலீஸ்
பினுவின் கூட்டாளி வினோத் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
சென்னை: பினுவின் கூட்டாளி வினோத் சென்னை சூளைமேட்டில் கைது செய்யப்பட்டார்.
கட்டபஞ்சாயத்து, ஆட் கடத்தல், போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட தொழில்களை செய்து வருபவர் பினு. இவர் சூளைமேட்டைச் சேர்ந்தவர். பூர்வீகம் கேரளா மாநிலம் ஆகும்.
இவர் மீது கொலை உள்ளிட்ட 4 -க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. தலைமறைவாக போலீஸுக்கு போக்கு காட்டி வந்த பினு மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க போலீஸார் தீவிரம் காட்டி வந்தனர்.
இந்நிலையில் பூந்தமல்லியை அடுத்த மலையாம்பாக்கத்தில் ரவுடி பினுவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக அனைத்து ரவுடிகள் ஒன்று திரண்டனர். ஆட்டம், பாட்டம் , கொண்டாட்டம் என மப்பில் ஜாலியாக இருந்த 70 -க்கும் மேற்பட்ட ரவுடிகளை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அப்போது பினு, கனகு, விக்கி ஆகிய மூன்று முக்கிய ரவுடிகள் தப்பியோடினர். அவர்களை பிடிக்க 3 தனிப்படை போலீஸார் சேலத்துக்கு விரைந்தனர். இதையடுத்து அவரது முக்கிய கூட்டாளி முகேஷை தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் போலீஸார் நேற்று முன் தினம் கைது செய்தனர்.
இதையடுத்து பினுவின் நண்பர் மாதவனை கரூரில் கைது செய்தனர். இந்நிலையில் சென்னை சூளைமேட்டில் பதுக்கியிருந்த பினு கூட்டாளி வினோத்தை போலீஸார் கைது செய்தனர். பினு குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.