அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியவர்.. ஜாமீனில் வெளியே வந்த ரவுடி பினு தலைமறைவு
அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய பினு ஜாமீனில் வந்த பிறகு தலைமறைவாகிவிட்டார்.
Recommended Video
சென்னை: அம்பத்தூர் காவல் நிலையத்தில் சரணடைந்த ரவுடி பினு ஜாமீனில் வந்த பிறகு தலைமறைவானார்.
பிப்ரவரி 6-ஆம் தேதி ரவுடி பினுவின் பிறந்தநாள் ஆகும். இவர் மீது கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், போதை பொருள் கடத்தல் என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் தனக்கு போட்டியாக உள்ள மற்றொரு ரவுடி ராதாகிருஷ்ணனை போட்டு தள்ள ரவுடி பினு தனது கூட்டாளிகளுடன் திட்டமிட்டார்.
இதற்காக பூந்தமல்லியில் ஒரு லாரி ஷெட்டில் வைத்து பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்தது. இதில் அரிவாளை கொண்டு கேக்கை வெட்டினார் பினு. இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட ரவுடிகள் குடித்துவிட்டு ஆட்டம் போட்டனர்.
தேடுதல் வேட்டை
அந்த சமயம் பார்த்து போலீஸார் அவர்களை சுற்றி வளைத்தனர். குடிபோதையில் இருந்ததால் 75 ரவுடிகள் போலீஸாரிடம் சிக்கினர். இதில் பினு உள்ளிட்ட முக்கிய 3 ரவுடிகள் தப்பினர். இந்நிலையில் தனிப்படை அமைத்து போலீஸார் அவர்களை தேடி வந்தனர்.
|
கதறி அழும் வீடியோ
இந்நிலையில் தலைமறைவுக்கு பின்னர் கடந்த பிப். 13-ஆம் தேதி ரவுடி பினு அம்பத்தூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அப்போது நான் அவ்ளோ பெரிய ரவுடி இல்லை என்றும் மன்னித்துவிட்டு விட்டால் திருந்தி வாழ்கிறேன் என்றும் ரவுடி பினு கதறி அழும் வீடியோ வைரல் ஆனது.
கையெழுத்திட உத்தரவு
இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் ஜாமீன் கோரி விண்ணப்பம் செய்தார். கடந்த ஜூன்23- ஆம் தேதி அவருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கப்பட்டது. அன்று முதல் தினமும் மாங்காடு காவல் நிலையத்தில் காலை 10 மணிக்கு கையெழுத்திட வேண்டும் என பினுவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தலைமறைவு
ஆனால் ஜூன் 23-ஆம் தேதிக்கு அடுத்த நாள் முதல் பினு இன்று வரை கையெழுத்திட காவல் நிலையத்துக்கு வரவில்லை. இதனால் அவர் தலைமறைவாக உள்ளதாக போலீஸார் கருதுகின்றனர்.