அண்ணாமலைக்கு ஸ்கெட்ச் போட்ட ரவுடி - போலீஸ் துரத்தியதில் மாடியில் இருந்து குதித்து பலி
சென்னை திருவொற்றியூரில் போலீசார் துரத்திய போது மாடியில் இருந்து கீழே குதித்த ரவுடி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Recommended Video
சென்னை: சென்னை திருவொற்றியூரில் ரவுடியை கொலை செய்ய திட்டம் தீட்டியவர்களை பிடிக்க காவல்துறையினர் முயன்ற போது தப்பிக்க மாடியில் இருந்து குதித்த ரவுடி ஒருவர் உயிரிழந்தார்.
சென்னை திருவொற்றியூர் கிராமத்தெருவில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ராசையா,22 நெல்லிக்காரன் தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ்,22. ஆர்.கே.நகரை சேர்ந்தவர் ஜோதிபாசு 24. 3 பேரும் ரவுடிகள்.
இவர்கள் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. மூவரும் சில நாட்களுக்கு முன்பு ஒரு வழக்கில் இருந்து ஜாமீனில் விடுதலையாகி வந்தனர்.
திருவொற்றியூர் பட்டினத்தார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவுடி அண்ணாமலை. திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு குற்றங்களை அண்ணாமலை மற்றும் மோகன்ராஜ் இணைந்து செய்துள்ளனர்.
அண்ணாமலையை கொல்ல திட்டம்
புழல் சிறையில் அடைக்கப்பட்ட இருவருக்கும் பணத்தை பங்கு பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.
தொழில் போட்டி காரணமாக அண்ணாமலையை கொலை செய்ய ரவுடிகள் மோகன்ராஜ் உள்ளிட்ட 3 பேரும் திட்டமிட்டனர். இதை அறிந்த அண்ணாமலை இது தொடர்பாக திருவொற்றியூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராசையா உள்ளிட்ட 3 பேரையும் தேடி வந்தனர்.
மது மயக்கத்தில் ரவுடிகள்
இந்நிலையில் ராசையா,மோகன்ராஜ் உள்ளிட்ட மூவரும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இருப்பதாக காவல்துறையினருக்கு நேற்றிரவு தகவல் கிடைத்தது. மூவரும் மாடியில் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தனர் அப்போது அங்கு வந்த காவல்துறையினர் 3 பேரையும் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர்.
குடித்த ரவுடிகள்
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜோதிபாசு உடனே மாடியில் இருந்து குதித்து அங்கு உள்ள மரத்தின் கிளையை பிடித்து தப்பினார். இதேபோல் ராசையா, மோகன்ராஜ் ஆகியோரும் மாடியில் இருந்து குதித்து அதே மரக்கிளையை பிடித்து தப்ப முயன்றனர். ஆனால் மரக்கிளை முறிந்ததால் இருவரும் தவறி கீழே விழுந்தனர்.
தப்பியோடிய ரவுடி மரணம்
கீழே விழுந்தததில் பலத்த காயமடைந்த மோகன் ராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கான அனுப்பி வைக்கப்பட்டது. படுகாயங்களுடன் பிடிபட்ட ராசய்யா, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இருவரிடமும் இருந்து இரண்டு கத்திகளை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
போலீஸ் தேடுதல் வேட்டை
உயிரிழந்த மோகன்ராஜ் மண்ணடி விஜி கொலையில் தொடர்புடையவர். படுகாயமடைந்த ராசய்யா மீது காஞ்சிபுரம், திருப்போரூரில் பல்வேறு கொலை வழக்குகள் உள்ளன. இவர்கள் இருவருமே கல்வெட்டு ரவியிடம் வேலை செய்தவர்கள் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. தப்பியோடிய ஜோதிபாசுவை போலீசார் தேடிவருகின்றனர்.