சென்னையில் பயங்கரம்... ரியல் எஸ்டேட் அதிபர் மீது துப்பாக்கிச் சூடு.. ரவடிக் கும்பல் தாக்குதல்
சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் பட்டப் பகலில் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் மீது ஒரு கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர் குண்டுக் காயமடைந்து படுகாயமடைந்தார்.
காயமடைந்தவரின் பெயர் ஜெகன்னாதன் (51). இவர் தனது மனைவி மனோன்மணி மற்று இரு மகள்களுடன் மேற்கு சைதாப்பேட்டை அரங்கநாதன் சப்வே அருகே வசித்து வருகிறார். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். திமுகவைச் சேர்ந்த பிரமுகரும் கூட.
திங்கள்கிழமை காலை வழக்கம் போல வாக்கிங் சென்றுள்ளார் ஜெகன்னாதன். பின்னர் டூவீலரில் தனது நண்பர் வெங்கடேசனுடன் சைதாப்பேட்டையில் கட்டுமானம் நடந்து வரும் தனது சைட்டுக்குச் சென்றார்.
அப்போது நான்கு பேர் கொண்ட கும்பல் இவர்களை மடக்கியது. பின்னர் அவர்கள் மீது சரமாரியாக சுட்டு விட்டுத் தப்பி ஓடியது. இதில் ஜெகன்னாதன் உடலில் இரண்டு துப்பாக்கித் தோட்டாக்கள் பாய்ந்தன. அவரது இடது தோள்பட்டையிலும் கையிலும் குண்டு பாய்ந்தது. இந்த நிலையில் ஐந்து பேர் கொண்ட இன்னொரு கும்பல் அங்கு வந்து ஜெகன்னாதனை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார் ஜெகன்னாதன்.
இதைப் பார்த்து பீதி அடைந்த அப்பகுதி மக்கள் பயந்து அலறி ஓடினர். கடைகள் மூடப்பட்டன. பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் விரைந்து வந்து ஜெகன்னாதனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உடலிலிருந்து தோட்டாக்கள் அகற்றப்பட்டு விட்டன என்றாலும் கூட தொடரந்து கவலைக்கிடமான நிலையில் அவர் இருந்து வருவதாக தெரிகிறது. இந்த தாக்குதலுக்கு சிடி மணி என்கிற ரவுடியும், அவனது கும்பலும்தான் காரணம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள். முன்பு மணியும், ஜெகன்னாதனும் சேர்ந்து தொழில் செய்து வந்தனர். பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர்.
சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்துப் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குற்றவாளிகளுக்கும் வலை வீசப்பட்டுள்ளது.