வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி முட்டைப் பாண்டி வெட்டிக் கொலை... !
மதுரை: மதுரை வரிச்சியூர் செல்வத்தின் முக்கியக் கூட்டாளிகளில் ஒருவரான முட்டைப் பாண்டி என்கிற முட்டைக் கண் பாண்டி என்பவரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்து விட்டது.
நேற்று இரவு தீர்த்தக்காடு என்ற பகுதியில் குடித்துக் கொண்டிருந்தபோது பாண்டி தரப்புக்கும், எதிர் கோஷ்டிக்கும் இடையே நடந்த மோதலின்போது பாண்டியை அந்தக் கும்பல் போட்டுத் தள்ளி விட்டது.
கொல்லப்பட்ட பாண்டிக்கு வயது 22 தான் ஆகிறது. வரிச்சியூர் செல்வத்துடன் இருந்து வந்தவர். எப்போதும் செல்வத்துடன்தான் இருப்பார். இவர் மீது ஏராளமான கொலை, கொள்ளை, கட்டப் பஞ்சாயத்து வழக்குகள் உள்ளன.
மதுரை வண்டியூர் தீர்த்தக் காடு சவுராஷ்டிராபுரம் 1-வது தெருவில் இவரது வீடு உள்ளது. நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற முட்டை கண் பாண்டி அதே பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாருக்கு சென்றார். அங்கு சிலர் வந்தனர். அவர்கள் பாருக்குள் சென்று குடித்தனர்.
குடிபோதையில் இருந்த அவர்களுக்குள் காரசாரமாக மோதல் ஏற்பட்டுள்ளது. இது கைகலப்பாக மறியது. அங்கு குடிக்க வந்த பிற குடிகாரர்கள் அவர்கள விலக்கி விட்டுள்ளனர்.
இந்த நிலையில் இரவில் பாண்டி வெளியே போயுள்ளார். ஆனால் வீடு திரும்பவில்லை. தீர்த்தக்காடு பகுதியில் உள்ள ஒரு முள்புதருக்குள் பாண்டியின் பிணம் கிடந்தது தெரியவந்தது. இதுபற்றி கருப்பாயூரணி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது பாண்டியின் உடலில் வெட்டுக் காயங்கள் இருந்தது. அரிவாளால் வெட்டப்பட்டும், கத்தியால் குத்தியும் அவரைக் கொன்றுள்ளனர். மேலும் ஒரு கையும் துண்டிக்கப்பட்டிருந்தது.
இது குடிபோதையால் நடந்த தகராறா அல்லது முன்விரோதமா என்று தெரியவில்லை. போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாண்டி கொலையால், வண்டியூர், கருப்பாயூரணி பகுதிகளில் பரபரப்பு காணப்படுகிறது.