மனைவியுடன் கள்ளத் தொடர்பு… நண்பனை கொடூரமாக வெட்டி கொன்று வீசிய ரவுடி கைது
சென்னை: சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே இளைஞர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடைய நண்பரை போலீசார் கைது செய்தனர். மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த காரணத்தால் நண்பனை கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பேசின்பிரிட்ஜ் அருகே உள்ள ஒரு பாழடைந்த ரயில்வே கட்டடத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அழுகிய நிலையில் 24 வயது மதிக்கதக்க ஒரு இளைஞரின் கழுத்து, வலது கை, ஆண் உறுப்பு ஆகியவை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து பேசின்பிரிட்ஜ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கினர். கொலை செய்யப்பட்ட வாலிபரின் இடது கையில் பாக்யலட்சுமி என்ற பெயர் பச்சை குத்தப்பட்டிருந்தது. அதே சமயம் புளியந்தோப்பு கன்னிகாபுரத்தை சேர்ந்த பாக்யலட்சுமி என்ற பெண் தன்னுடைய மகன் பிரபாகரனை (வயது 24) காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்திருந்தார். விசாரணையில், கொல்லப்பட்ட இளைஞர் புளியந்தோப்பு கன்னிகாபுரத்தைச் சேர்ந்த மணிவண்ணன் மகன் பிரபாகரன்தான் என்பது தெரியவந்தது.
கடந்த 12-ஆம் தேதி முதல் பிரபாகரன் காணாமல் போய்விட்டார். இதையடுத்து அவரது பெற்றோர், கடந்த 14-ஆம் தேதி புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்த நிலையில் பிரபாகரன் கொலை செய்யப்பட்டு, சடலமாக மீட்கப்பட்டார்.
கொலைக்கான காரணம்
ஒரு பெண்ணை, பிரபாகரன் காதலித்து வந்ததும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பெண் வீட்டார் பிரபாகரனை அழைத்து மிரட்டியதும் தெரியவந்தது. காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில், அந்த பெண் வீட்டாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் பாக்யலட்சுமி, கடந்த 14ஆம் தேதி தனது மகன் பிரபாகரன், தேவராஜ் என்பவருடன் சென்றதாக போலீசாரிடம் தெரிவித்தார். அதன் அடிப்படையில் தேவராஜ் குறித்து போலீசார் விசாரித்தனர்.
ரவுடி நண்பன்
தேவராஜ் மீது புளியந்தோப்பு போலீஸ் நிலையத்தில் 2 கொலை வழக்குகளும், கொலை முயற்சி வழக்குகளும், 2 முறை குண்டர் சட்டத்தில் சிறை சென்று வந்த தகவலும் தெரியவந்தது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த தேவராஜ், மணலியில் தங்கி இருப்பதை அறிந்த போலீசார் அங்கு சென்று ரவுடி தேவராஜை கைது செய்தனர்.
வாக்குமூலம்
இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், தனது நண்பன் பிரபாகரனை கொலை செய்தது ஏன் என்று வாக்குமூலம் கொடுத்தார். அப்போது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு சிறையிலிருந்து வெளியே வந்த என்னிடம் அக்கம்பக்கத்தினர், எனது மனைவியுடன் பிரபாகரன் தொடர்பு வைத்திருப்பதாக தெரிவித்தனர். இதனால் கோபம் அடைந்த நான், கடந்த 13ஆம் தேதியன்று அவனை அழைத்து சென்று பேசின்பாலத்தின் கீழ் அமர்ந்து மது அருந்தினோம்.
குடிபோதையில் என் மனைவியுடன் உறவு வைத்திருப்பதை பிரபாகரன் தெரிவித்தான். இதில் ஆத்திரமடைந்த நான் அவனுடைய கழுத்து, வலது கை மற்றும் மர்ம உறுப்பை அறுத்து கொன்றேன்.
காட்டுப்பகுதியில் வீச்சு
கழுத்து, கை மற்றும் உறுப்பை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு மணலிக்கு கொண்டு சென்று காட்டுப் பகுதியில் வீசிவிட்டு, வீட்டுக்கு சென்று விட்டேன் என்றார். இதனையடுத்து போலீசார், மணலியில் உள்ள ஒரு குளத்தில் இருந்து பிரபாகரன் தலை, வலது கை உள்ளிட்ட பாகங்களை மீட்டனர். இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட தேவராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.