கொடுங்கையூர் ரவுடி முட்டை கோபி கொலையில் 5 பேர் கைது - ஜெயில் சண்டைக்கு பழி வாங்கிய ரவுடி
கொடுங்கையூர் ரவுடி முட்டை கோபி கொலை தொடர்பாக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை: திருந்தி வாழ ஆசைப்பட்டு மனு கொடுத்த கொடுங்கையூர் முட்டை கோபியை நேற்று 6 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக கொலை செய்தது. இந்த கொலை தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொடுங்கையூர் காமராஜர் சாலையில் வசித்து வந்தவர் கோபி என்கிற முட்டை கோபி, 36. அவித்த முட்டைகளை விரும்பி சாப்பிட்டதால் பெயருடன் 'முட்டை' அடைமொழியாக இணைந்து கொண்டது. இவர் மீது கொள்ளை, கொலை முயற்சி, வழிப்பறி, ஆள் கடத்தல் உள்பட 40 வழக்குகள் உள்ளன. 11 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு விடுதலையானார்.
பாட்ஷா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த கோபி கடந்த ஜனவரி மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். திருந்தி வாழ விரும்புவதாக கூறி முட்டை கோபி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் எழுத்துபூர்வமாகத் தெரிவித்தார். இதற்கிடையில், பெரம்பூர் பகுதி பாமக நிர்வாகியாகவும் பதவி கிடைக்கவே, ஆட்டோ ஓட்டி குடும்பம் நடத்தி வந்தார். இவருக்கு இரண்டு மனைவிகளும் குழந்தைகளும் உள்ளனர்.
தலையை சிதைத்த கும்பல்
திங்கட்கிழமையன்று காலை மூலக்கடை சந்திப்பில் உள்ள டீ கடையில் நின்று கொண்டிருந்த போது, 6 பேர் கொண்ட கும்பல் வந்து சரமாரியாக அரிவாளால் தாக்கி விட்டு தப்பினர். தலை சிதைக்கப்பட்ட கோபி, ரத்த வெள்ளத்தில் சாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து கொடுங்கையூர் காவல்நிலைய போலீசார் அங்கு சென்று கோபி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
5 ரவுடிகள் கைது
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ரவுடி முட்டை கோபியை கொலை செய்ததது அதே பகுதியை சேர்ந்த ரவுடி செபா என்கிற செபாஸ்டின் என தெரியவந்தது. தனிப்படை போலீசார் கொலை தொடர்பாக வியாசர்பாடி செபா என்கிற ஜெபஸ்டீன்,32, மணி என்கிற ஓட்டவடை மணி,30, கிருஷ்ணா என்கிற கிச்சா,29, சிவா, கடுக்கா கார்த்திக்,35 ஆகிய 5 பேரைக் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கொன்னா சீனிவாசனை தேடி வருகின்றனர்.
புழல் சிறையில் சண்டை
முட்டை கோபி கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த ரவுடி பன்னீருடன் சேர்ந்து கொண்டு மாமூல், கட்டப்பஞ்சாயத்து செய்ததாக தெரிகிறது. அதே பகுதியில் மாமூல் வசூலித்து வந்த ஏரியா ரவுடியான செபாஸ்டினுக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே வேறொரு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட செபாஸ்டின் குண்டர் தடுப்பு காவலில் சிறை வைக்கப்பட்டான். புழல் சிறையில் இருந்த போது முட்டை கோபிக்கும் செபாஸ்டியனுக்கு கடும் சண்டை ஏற்பட்டது. அப்போது உன் சாவு என் கையால்தான் என்று செபாஸ்டீன் கூறியதாக தெரிகிறது.
புழல் சிறையில் திட்டம்
முட்டை கோபி, ரவுடி பன்னீர் ஆகிய இருவரையும் கொலை செய்ய சிறையில் இருந்தே செபஸ்டின் திட்டமிட்டுள்ளான். அதன்படி கடந்த வாரம் சிறையில் இருந்து வெளியில் வந்த செபாஸ்டின் தனது கூட்டாளிகளுடன் ஸ்கெட்ச் போட்டது போல் கோபியை தீர்த்துக் கட்டியுள்ளான் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. திருந்தி வாழ விரும்பியதாக கூறிய முட்டை கோபி கொலை செய்யப்பட்டதால் அவரது கூட்டாளிகளும் பதற்றமடைந்துள்ளனர்.