என்கவுன்ட்டரில் ரவுடி கொலை: நெல்லையில் பேருந்துகள் மீது கல்வீச்சு- பதற்றம்
நெல்லை: நெல்லை அருகே ரவுடி கிட்டப்பா என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதையடுத்து அவரது ஆதரவாளர்கள் 6 பேருந்துகள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே இருக்கும் கான்சாபுரத்தைச் சேர்ந்தவர் கிட்டு என்கிற கிட்டப்பா(39). அவர் மீது கொலை, கொள்ளை, மணல் கடத்தல் உள்பட பல வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கிட்டப்பாவை தேடி வந்த தனிப்படை போலீசாருக்கு அவர் நெல்லை அருகே உள்ள சுத்தமல்லியில் இருக்கும் ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக கடந்த சனிக்கிழமை இரவு தகவல் கிடைத்தது.
தகவல் கிடைத்தவுடன் போலீசார் அந்த வீட்டுக்கு விரைந்து சென்று கிட்டப்பாவை பிடிக்க முயன்றனர். அப்போது அவர் போலீசாரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடி முயற்சி செய்தார். இதையடுத்து போலீசார் அவரை சுட்டுக் கொன்றனர்.
இதற்கிடைய கிட்டப்பா மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கியதில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், காவலர்கள் கிருஷ்ணசாமி, சரவணசுந்தர் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கிட்டப்பாவின் உடல் வைக்கப்பட்டுள்ள பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு நேற்று சென்ற அவரது உறவினர்கள், ஆதரவாளர்கள் அவரை போலீசார் சுட்டுக் கொலை செய்ததை கண்டித்தனர். அங்கிருந்து கிளம்பிய அவர்கள் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி அருகே இருக்கும் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்த அரசு பேருந்து மீது கல் வீசினர். மேலும் பழைய பேருந்து நிலையம் மற்றும் குலவணிகர்புரத்தில் தலா ஒரு அரசுப் பேருந்து மீது கல்வீசித் தாக்கினர்.
இது தவிர தருவையில் இருந்து சந்திப்பு நோக்கி வந்த மினி பேருந்து மீதும் கல் வீசினர். முன்னதாக சனிக்கிழமை இரவு நெல்லையில் இருந்து ஆத்தூருக்கு சென்ற அரசு பேருந்து மீதும், கே.டி.சி. நகர் பணிமனைக்கு சென்ற அரசுப் பேருந்து மீதும் கல் வீசித் தாக்குதல் நடத்தினர்.
பேருந்துகளை தாக்கிய சம்பவம் தொடர்பாக போலீசார் 22 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லையில் ஆங்காங்கே பேருந்துகள் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.