என்கவுண்டரில் தப்பி ஓடிய மாயக்கண்ணன் போலீசில் சரண்
என்கவுண்டர் நடந்த போது தப்பி ஓடிய வீட்டின் உரிமையாளர் மாயக்கண்ணன் விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
Recommended Video
மதுரை: சிக்கந்தர்சாவடியில் என்கவுண்டர் நடந்த போது தப்பி ஓடிய வீட்டின் உரிமையாளர் மாயக்கண்ணன் விருதுநகர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மும்தாஜ் முன்னிலையில் சரணடைந்துள்ளார்.
மதுரையில் என்கண்டரின் போது, மாயக்கண்ணன் என்ற ரவுடி தப்பிச் செல்ல உதவியதாக, சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி முத்துஇருளாண்டியின் மனைவியையும், மைத்துனரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை காமராஜர்புரம் பகுதியில் அ.தி.மு.க. பிரமுகர் ராஜபாண்டிக்கும், தி.மு.க. பிரமுகர் வி.கே. குருசாமிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் இருதரப்பிலும் அடுத்தடுத்து படுகொலைகள் நடந்தன.
இந்த கொலை வழக்குகளில் தொடர்புடைய மதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்த ரவுடிகள் முத்து இருளாண்டி என்ற மந்திரி, சகுனி கார்த்திக் ஆகிய 2 பேரும் கடந்த 4 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தனர்.
போலீஸ் என்கவுண்டர்
இவர்கள் இருவரும் அலங்காநல்லூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக மதுரை நகர போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து செல்லூர் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 2 பேரும் மதுரையை அடுத்த சிக்கந்தர்சாவடி பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த பகுதியை சுற்றிவளைத்தனர்.
சுட்ட போலீஸ்
அங்குள்ள மந்தையம்மன் கோவில் தெற்கு தெருவில் உள்ள மாயக்கண்ணன் என்பவரது வீட்டில் ரவுடிகள் முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் ஆகிய 2 பேரும் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் சாதாரண உடையில் வீட்டுக்குள் புகுந்தனர். அப்போது நடந்த சண்டையில் இரண்டு பேரை போலீசார் சுட்டனர்.
3 பேர் தப்பி ஓட்டம்
போலீஸ் நடத்திய என்கவுண்டரில் ரவுடிகள் 2 பேரும் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பலியானார்கள்.
சம்பவத்தின்போது வீட்டில் பதுங்கி இருந்த மாயக்கண்ணன், முனியசாமி, குட்டிபாலா ஆகிய 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.
ரவுடி மனைவிகள் கைது
தப்பி ஓடியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அப்போது சுடப்பட்ட மனைவி முத்துஇருளாண்டி மனைவி முத்துலட்சுமி, முத்துலட்சுமியின் தம்பி ரவிச்சந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
சரணடைந்த மாயக்கண்ணன்
தப்பி ஓடிய மாயக்கண்ணன் சென்னை அயனாவரத்தை சேர்ந்தவன். அவன் மீது பல்வேறு கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இதனிடையே மாயக்கண்ணன் விருதுநகர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மும்தாஜ் முன்னிலையில் சரணடைந்துள்ளார்.