மதுரை நாட்டு வெடிகுண்டு கண்டெடுப்பு: பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம் உட்பட மூவர் சரண்!!
மதுரை/விழுப்புரம்: மதுரையில் குப்பைத் தொட்டியில் 11 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம் உட்பட மூன்று பேர் நீதிமன்றங்களில் சரணடைந்துள்ளனர்.
மதுரை அண்ணாநகரில் குப்பைத் தொட்டி ஒன்றில் 11 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வெடிகுண்டுகளை குப்பைத் தொட்டியில் போட்டது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மதுரை ரவுடி வரிச்சூர் செல்வம் என்பவர் மதுரையைச் சேர்ந்த மற்றொரு ரவுடி பெருசு அழகர் என்பவரை கொலை செய்ய திட்டம் தீட்டியிருந்தார். இதற்கான சென்னையை சேர்ந்த பிரவீன் என்பவரிடம் நாட்டு வெடிகுண்டுகளுக்கு 'ஆர்டர்' கொடுத்திருக்கிறார்.
பிரவீனோ மதுரையைச் சேர்ந்த ரவுடி அப்பள ராஜாவின் கூட்டாளியான இஸ்மாயில்புரம் கீரி மணி என்ற மணிமாறனிடம் வெடிகுண்டுகள் தயாரிக்க சொல்லியிருக்கிறார். இந்த நிலையில் சென்னை பிரவீன் போலீசில் சிக்க பயந்து போன கீரி மணி வெடிகுண்டுகளை குப்பைத் தொட்டியில் போட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து வரிச்சூர் செல்வம், கீரி மணி ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று மதுரை 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் வரிச்சூர் செல்வம் தனது ஓட்டுநருடன் சரணடைந்தார். அதேபோல் மற்றொரு ரவுடியான கீரி மணி என்ற மணிமாறன் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
மதுரையில் ரவுடிகள் அட்டகாசம் மீண்டும் தலை தூக்கியிருப்பது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது சரணடைந்துள்ள ரவுடி வரிச்சூர் செல்வம் உடல் முழுவதும் நகைகள் அணிந்து கொண்டு நாள்தோறும் ஃபேஸ்புக்கில் கெத்தாக புகைப்படங்கள் போட்டு பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.