ரயில்களில் பட்டாசு கொண்டு போகாதீங்க... பிடித்தால் 3 ஆண்டு சிறை
ரயில்களில் பட்டாசு கொண்டு சென்றால் மூன்றாண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று ரயில்வே போலீசார் எச்சரித்துள்ளனர்.
சேலம்: ரயில்களில் பட்டாசு கொண்டுச் சென்றால் அதிகபட்சமாக 3 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றுத்தரப்படும் என ரயில்வே பாதுகாப்பு படையினர் எச்சரித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை வரும் 18ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ரயில்களில் பயணிக்கும் போது பட்டாசு பார்சல்களை எடுத்து செல்ல வாய்ப்புள்ளது என்பதால், விபத்துகள் நேரிடாமல் தடுக்க பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், ஊட்டி, கரூர், ஆத்தூர் உள்ளிட்ட ரயில்வே ஸ்டேஷன்களில், பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதன்பேரில் பட்டாசுகளை ரயிலில் எடுத்து செல்ல கூடாது என அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ரயில்களில் ஆபத்தான முறையில் பட்டாசுகளை எடுத்து செல்லக் கூடாது. மீறி எடுத்து சென்றால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பயணிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படையினர் கூறுகையில், இந்திய ரயில்வே சட்டம் 164வது பிரிவின் படி, ரயில்களில் பட்டாசு, பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட இதர வெடிபொருட்களையும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களையும் எடுத்து செல்வது குற்றச்செயலாகும்.
இந்த சட்டத்தின்படி அதிகபட்சம் 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், பட்டாசு கொண்டு செல்ல கூடாது என அறிவுறுத்தி வருகிறோம். விதிமுறையை மீறி பட்டாசு கொண்டு செல்லப்படுவது கண்டறிப்பட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர்.