சென்னையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு.. ரூ 1.30 கோடி பறிமுதல்
சென்னையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ1.30 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ரூ.1.30 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.34 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கருப்பு பணம், கள்ள நோட்டுக்களை ஒழிக்கும் நடவடிக்கையாக கடந்த 8-ம் தேதி இரவு முதல் புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை வங்கி, தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதனிடையே ஹவாலா பணப் பரிமாற்றம் செய்வோரிடம் கருப்புப் பணம் புழங்குவதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில் பதுக்கல் கருப்பு பணத்தை கண்டுபிடிக்க நாணய மாற்று மையங்கள், ஹவாலா பணம் மாற்றும் ஏஜெண்டுகளுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அலுவலகங்களில் இன்று மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். டெல்லி, மும்பை, கொல்கத்தா, கவுகாத்தி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
சென்னையில் 5 தனியார் நிறுவனங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ. 1.30 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் ரூ.34 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சோதனை நடைபெற்ற இடங்கள் தொடர்பான தகவல்களை தெரிவிக்க அமலாக்கத்துறை மறுத்துவிட்டது.