கிருஷ்ணகிரி சாலை விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி: ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: கிருஷ்ணகிரியில் நடந்த சாலை விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலை- மேலுமலை, குருபரப்பள்ளி என்ற இடத்தில் இன்று (3.6.2016) ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்த லாரியின் டயர் வெடித்ததில், நிலைதடுமாறி ஓசூர் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மற்றும் பின்னால் வந்த சீருந்துகள் மீது மோதியதில் 17 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
இந்த சாலை விபத்தில் அகால மரணமடைந்த 17 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்து பற்றி அறிந்தவுடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்ள நான் உத்தரவிட்டபடி அவர்கள் அப்பணியினை மேற்கொண்டுள்ளனர்.
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோரை உடனடியாக கிருஷ்ணகிரி சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்குமாறும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து அவர்களுக்கு உயரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறும் நான் ஆணையிட்டுள்ளேன்.
இந்த சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும், கிருஷ்ணகிரி மாவட்ட நிருவாகத்திற்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் இவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த 17 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50,000/- ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்'' எனக் கூறியுள்ளார்.