சென்னை ரிசர்வ் வங்கிக்கு போனால் சில்லறை கிடைக்கும்... ரூ. 10, 50 நோட்டுகள் நாணயமும் பெறலாம்
சில்லறை இல்லாமல் அவதிப்படும் மக்கள் சென்னை ரிசர்வ் வங்கிக்கு போனால் ரூ.10 மற்றும் 50 நோட்டுகள், 5 ரூபாய் நாணயம் பெறலாம்.
சென்னை: சில்லறைத் தட்டுப்பாடு அதிகம் ஏற்பட்டுள்ளதால் சென்னை ரிசர்வ் வங்கியில் பழைய நோட்டை மாற்றுபவர்களுக்கு 10 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் 500 மதிப்பில் 5 ரூபாய் நாணயங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கடந்த 6 நாட்களாக கையில் பணம் இல்லாமலும், இருக்கும் பணத்தை மாற்ற முடியாமலும், மாற்றிய பணத்தை செலவு செய்ய முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். பிரதமர் மோடி 8ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்ற அறவிப்பு மக்களை ஒரு வித செயலற்ற தன்மை கொண்டு சென்றுள்ளது.
10ம் தேதியில் இருந்து மக்கள் வங்கிகளுக்கு சென்று பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகின்றனர். வங்கிகளிலும் 2000 ரூபாய் புது நோட்டைத்தான் வழங்கி வருகின்றனவே தவிர, அன்றாட செலவுகளை செய்ய சில்லறையாக எதுவும் கொடுப்பதில்லை.
இதனால், 100 ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சின்ன, சின்ன செலவுகள் செய்வதற்கான 10 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளுக்கு மக்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளன. இந்த பிரச்சனைகளை முழுவதுமாக தீரக்க முடியவில்லை. என்றாலும், சென்னை ரிசர்வ் வங்கியில் பழைய ரூபாய் நோட்டை மாற்றிக் கொள்வோருக்கு சில்லறைகளை வழங்கி வருகிறது.
பொதுமக்களின் சிரமத்தை குறைக்க 10 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளை சென்னை ரிசர்வ் வங்கி கொடுத்து வருகிறது. மேலும் ரூ. 500 மதிப்பிற்கு 5 ரூபாய் நாணயங்கள் வழங்கப்படுகிறது. இதனால் ரிசர்வ் வங்கியில் பழைய நோட்டை மாற்ற மக்கள் அதிக அளவு கூடியுள்ளனர். சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் நின்று மக்கள் பழைய ரூபாய் நோட்டுக்களை மக்கள் மாற்றி வருகின்றனர்.