இந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற்ற ஆண்டுதோறும் வெளிநாட்டிலிருந்து இறக்கப்படும் ரூ.10,500 கோடி!
சென்னை: இந்தியாவிலுள்ள இந்துக்களை கிறிஸ்தவர்களாக மதம் மாற்றுவதற்காக இங்குள்ள கிறிஸ்தவ மிஷினரிகளுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.10,500 கோடி பணம் நன்கொடையாக வந்துகொண்டுள்ளது.
இந்தியாவிலுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு (என்ஜிஓ) வெளிநாடுகளில் இருந்து வரும் பணம் குறித்து இந்திய உளவுத்துறை ஆய்வு மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்துக்களாக மீண்டும் மாற்றிய 200 முஸ்லிம்கள் குறித்து நாடாளுமன்றத்தில் கூட விவாதிக்கும் அரசியல்வாதிகள், ஆசை காண்பித்து இந்துக்களை கிறிஸ்தவர்களாக மதம் மாற்றும் கும்பலுக்கு எதிராக வாய் திறக்க மறுப்பது ஏன் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
மதமாற்றம்
இந்தியாவிலுள்ள என்ஜிஓக்கள் பலவும் கோடிக்கணக்கான ரூபாய்களை பெற்றுள்ளதும், அதற்கு முறையாக கணக்கு காண்பிக்காததும் உளவுத்துறை கவனத்திற்கு வந்துள்ளது. துருவி துருவி விசாரணை நடத்தியபோது இந்த பணம் மதமாற்றங்களுக்கு பயன்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
தனியார் அமைப்பு ஆய்வு
பெங்களூருவின் BIRD என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், கிறிஸ்தவ மதபோதகர்கள் சிறப்பான மார்க்கெட்டிங் டெக்னிக்குகள் மூலமாக இந்துக்களை மதமாற்றம் செய்து வருவதாக கண்டுபிடித்துள்ளனர்.
சுயநலத்துக்காக மதமாற்றம்
மதகோட்பாடுகளுக்காக இன்றி, தங்களை வளப்படுத்திக்கொள்ள மதபோதகர்கள் மிகவும் ஆக்ரோஷமாக மதமாற்றங்களில் இறங்கியுள்ளதாக பெங்களூரு அமைப்பின் ஆய்வு கூறுகிறது.
பணம், வேலைவாய்ப்பு
மதமாற்றத்தில் பல வகை உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. கஷ்டப்படுபவர்களுக்கு பணம் கொடுத்து உதவி செய்து மதம்மாற்றுவது, வேலை வாங்கி கொடுத்து மதம்மாற்றுவது என்று மதமாற்றத்தில் பல வகைகள் உள்ளன. அப்படியும் மதம் மாற தவறினால் மிரட்டல்களும் நடப்பது உண்டாம்.
இந்து கடவுள்களை தாக்கி பேசி மதமாற்றம்
சில கிறிஸ்தவ மதமாற்றிகள், இந்து சாமியார்களை போல வேஷம் அணிந்து வந்து, கிறிஸ்தவம்தான் உண்மையான மதம் என்றும், தாங்கள் இப்போதுதான் தெரிந்து கொண்டதாகவும் கூறி இந்துமக்களை ஏமாற்றுவதும் நடக்கிறதாம். மதம் மாற்றியவர்கள் எண்ணிக்கையை வைத்து நல்ல பணம் சம்பாதிக்கலாம் என்பது மதமாற்றிகள் நோக்கம் என்கிறது அந்த ஆய்வு.
அமெரிக்கா, ஐரோப்பா நிதி
இந்தியாவிலுள்ள மதம்மாற்றும் மிஷினரிகள், என்ஜிஓக்களுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.10,500 கோடி பணம் நன்கொடையாக வருகிறதாம். குறிப்பாக அமெரிக்கா, ஜெர்மனி, ஐரோப்பா, நெதர்லாந்து, ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பணம் அதிக அளவு வருகிறது.
அரசியல்வாதிகளுக்கும் லஞ்சம்
இதுகுறித்து உளவுத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, இதற்கு முன்பு இருந்த அரசுகள் மதமாற்ற பிரச்சினையை கண்டும் காணாமல் இருந்துவிட்டன. உள்ளூர் அரசியல் பிரமுகர்களுக்கும் மதபோதகர்கள் அளிக்கும் அன்பளிப்புகள்தான் இதற்கெல்லாம் காரணம் என்றார்.