கோவை: எஸ்.பி.ஐ வங்கியில் வைத்திருந்த ரூ.10 லட்சம் திடீர் மாயம்
கோவை: கோவை அருகே ஏ.டி.எம் மையங்களுக்கு கொண்டு செல்வதற்காக வங்கியில் எடுத்து வைத்திருந்த 10 லட்சம் ரூபாய் பணம் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையை அடுத்த போத்தனூர் சிட்கோவில் ஸ்டேட் பாங்கி கிளை உள்ளது. இதன் கட்டுப்பாட்டில் பல ஏ.டி.எம். சென்டர்கள் உள்ளன. இந்த ஏ.டி.எம். சென்டர்களில் உள்ள எந்திரங்களில் பணம் வைப்பதற்காக வங்கியின் லாக்கரில் இருந்து ரூ.3 கோடி எடுக்கப்பட்டது.
வங்கியின் மானேஜர் மற்றும் பணம் வைக்கக்கூடியவர்கள் என 4 பேருக்குத்தான் லாக்கரின் ரகசிய எண் தெரியும். லாக்கரில் இருந்து எடுக்கப்பட்ட பணம் அங்குள்ள மேஜை மீது வைக்கப்பட்டது. பின்னர் பணம் கொண்டு செல்வதற்கான வாகனத்தில் ஏற்றுவதற்கு முன்பு அந்த பணத்தை எண்ணிப் பார்த்தனர்.
அப்போது 1000 ரூபாய் நோட்டுகள் கொண்ட ஒரு பண்டல் மாயமாகி இருப்பது தெரியவந்தது. அதில் ரூ.10 லட்சம் இருந்ததாக கூறுகிறார்கள். லாக்கரில் இருந்து மேஜையில் எடுத்து வைக்கப்பட்ட பணம் எப்படி மாயமானது? என்பது புரியாத புதிராக உள்ளது.
ரூ.3 கோடி எடுத்து மேஜை மீது வைத்த சம்பவத்தில் 4 பேருக்குத்தான் தொடர்பு உள்ளது. அவர்களிடம் உரிய முறையில் விசாரித்தால் பணம் 10 லட்சம் எப்படி மயமானது என்பது தெரிந்துவிடும்.ரூ.10 லட்சம் மாயமானது குறித்து வங்கியின் மானேஜர் போத்தனூர் போலீசில் புகார் செய்தார்.
புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வங்கிக்கு வந்து பணம் 10 லட்சம் மாயமான இடத்தை பார்வையிட்டனர். அங்குள்ள கேமிராவை ஆராய்ந்தனர். அப்போது கடந்த 3ம் தேதி முதல் செயல்படாமல் இருப்பது தெரியவந்தது. எதேச்சையாக கேமிரா செயல்படவில்லையா? அல்லது திட்டமிட்டே கேமிராவை செயல்இழக்கச் செய்தார்களா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.
வங்கியினுள்ளேயே இருந்த பணம் ரூ.10 லட்சம் மாயமானது போத்தனூர் பகுதியில் பெரும் பரபரப்பை எற்படுத்தி உள்ளது.