மணிப்பூரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ10 லட்சம் நிதி உதவி!!
சென்னை: தீவிரவாதிகள் தாக்குதலில் மணிப்பூர் மாநிலத்தில் வீரமரணமடைந்த ஹவில்தார் மோகன்குமார் (41) குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை:
மணிப்பூர் மாநிலம், தியோகோத்தங், சுராசந்த்புர் பகுதியில் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் ஏற்பட்ட மோதலில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஹவில்தார் ஜி.மோகன்குமார் படுகாயமடைந்து மே 29-ஆம் தேதி வீரமரணம் அடைந்தார் என்ற செய்தியை அறிந்து நான் ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த மோகன்குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் மோகன்குமாரின் குடும்பத்துக்கு பத்து லட்சம் ரூபாய் வழங்கவும் நான் ஆணையிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கால்பந்து வீரர்
வீரமரணம் அடைந்த மோகன்குமாரின் சொந்த ஊர் குன்னூர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கோவை புதூர் பகுதியில் குடும்பத்தினருடன் குடியேறினார்.
மோகன்குமாருக்கு 5 சகோதரிகள் மற்றும் 2 சகோதரர்கள் உள்ளனர். மோகன்குமாருக்கு 5வயதில் ரித்திக் என்ற ஒரு மகன் இருகிறான். கால்பந்து வீரரான மோகன்குமார் கடந்த 20 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். மோகன்குமாரின் தந்தையும் ராணுவ வீரராவார்.