சில்லறை நோட்டு தட்டுப்பாடு.. படுஜோராக ரூ.50, 100 கள்ள நோட்டு புழக்கம்.. வியாபாரிகள் அதிர்ச்சி
சில்லறை நோட்டு தட்டுப்பாடுகள் அதிகம் இருப்பதை பயன்படுத்திக் கொண்டு ரூ.50, 100 மதிப்பிலான கள்ள நோட்டுக்கள் புழக்கத்திற்கு வந்துள்ளன.
ஆத்தூர்: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பிற்கு பின்னர் உருவான சில்லறை நோட்டுத் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி 50 மற்றும் 100 ரூபாய் மதிப்பில் கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. இதனால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கறுப்புப் பணத்தையும் கள்ள நோட்டுக்களையும் ஒழிக்கும் நடவடிக்கை என்று கூறி கடந்த 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இதனால் கறுப்புப் பணம் ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும், கள்ள நோட்டுக்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு கூறிவருகிறது.
இதே காலகட்டத்தில் மக்களின் 500 ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால் வியாபாரங்கள் சுணங்கிப் போய் உள்ளன. மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க போதுமான அளவு சில்லறை நோட்டுக்கள் இல்லாமல் திண்டாடி வருகின்றனர். குறிப்பாக 500 ரூபாய் நோட்டு இல்லாததால் 100 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளின் தேவை அதிகமாகியுள்ளது. அந்த நோட்டுக்களும் வங்கிகளிலேயே தட்டுப்பாடு இருந்து வருகின்றன.
இதனை நன்றாக பயன்படுத்திக் கொள்கின்றனர் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடும் ஆசாமிகள். 50 மற்றும் 100 ரூபாய் கள்ள நோட்டுக்களின் தேவை அதிகமாக இருப்பதால் எளிதில் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடப்படுகிறது. குறிப்பாக சேலம், ஆத்தூர் பகுதியில் அதிக அளவில் 100 மற்றும் 50 ரூபாய் கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.
சேலம் ஆத்தூரில், 100 மற்றும் 50 ரூபாய் கள்ள நோட்டுக்களை கடைகளில் கொடுத்து பொருட்களை வாங்க முயன்ற போது வியாபாரிகள் இதனை கண்டு பிடித்துள்ளனர். இதனால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பார்ப்பதற்கு உண்மையான 100 ரூபாய் நோட்டுப் போல இருந்தாலும், கைக்கு பழக்கப்பட்ட நோட்டில் இருந்து சற்று வேறுபட்டு இருப்பதை உணரும் வியாபாரிகள் கள்ள நோட்டை எளிதாக கண்டுபிடித்து விடுகின்றனர். எனினும், அவசரத்தில் வியாபாரிகளுக்கே தெரியாமல் எவ்வளவு நோட்டுக்கள் வாங்கப்பட்டிருக்கிறதோ என்ற அச்சத்தில் வியாபாரிகள் உள்ளனர்.
ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் அசாதாரண சூழல் நிலவும் போது, இதுபோன்று 100 மற்றும் 50 ரூபாய் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடும் ஆசாமிகளை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரி வருகின்றனர்.