1000 ரூபாய் நோட்டுக்கு "கோவிந்தா".. விலக்கு அளிக்கப்பட்ட சேவைகளில் ரூ. 500 மட்டுமே பயன்படுத்தலாம்!
விதி விலக்கு அளிக்கப்பட்ட கட்டணங்களை செலுத்த 500 ரூபாய் நோட்டுக்களை மட்டுமே பயன்படுத்த முடியும், 1000 ரூபாயை பயன்படுத்த முடியாது.
சென்னை: மத்திய நிதியமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்புகளில் முக்கியமானது இது. விலக்கு அளிக்கப்பட்ட அத்தியாவசியச் சேவைக் கட்டணங்களைச் செலுத்த 500 ரூபாய் நோட்டுக்களை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதே அது.
டிசம்பர் 15ம் தேதி வரை குடிநீர்க் கட்டணம் உள்ளிட்ட சில அத்தியாவசிய சேவைகளுக்கான கட்டணத்தை செலுத்த 500 ரூபாய் நோட்டை அனுமதிப்பது குறித்த முடிவை இன்று மாலை நிதியமைச்சகம் அறிவித்தது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்பு என்னவென்றால், அந்த கட்டணத்தை 500 ரூபாய் நோட்டுக்களை மட்டுமே செலுத்தி சலுகையை பயன்படுத்த முடியும்.
மாறாக. 1000 ரூபாய் நோட்டு வாங்கப்பட மாட்டாது என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 1000 ரூபாய் நோட்டு இன்று நள்ளிரவோடு பெருமளவில் முடிவுக்கு வருகிறது. இனிமேல் வங்கிகளில் தங்களது கணக்குகளில் மட்டுமே 1000 ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்ய முடியும்.