மாற்றுத் திறனாளிகளுக்கு 2000 ஸ்கூட்டர்கள் வழங்க 11.9 கோடி ஒதுக்கீடு
மாற்றுத் திறனாளிகளுக்கு 2000 ஸ்கூட்டர்கள் வழங்க 11.9 கோடி ரூபாய் தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில் 2000 ஸ்கூட்டர்கள் வழங்க 11.9 கோடி ரூபாய் தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
2017-18ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை தமிழக சட்டசபையில் இன்று நிதி அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். இதில் மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்கள் பல அறிவிக்கப்பட்டது.
அப்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் ஆண்டில் ரூ.11.9 கோடி செலவில் 2000 ஸ்கூட்டர்கள் வழங்கப்படும் என்று ஜெயக்குமார் கூறினார். மேலும், செவித்திறன் குறைபாடுள்ள அரசு ஊழியர்களுக்கு மாதாந்திர பயணப்படி ரூ.1000 வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
தசைச்சிதைவு, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களில் 1000 பேருக்கு மோட்டார் பொருத்திய வண்டிகள் வழங்கப்படும் என்றும் ஜெயக்குமார் கூறினார்.
இதுதவிர, மாற்றுத்திறனாளி திறன் மேம்பாட்டிற்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு வரும் ஆண்டில் ரூ.466 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் ஜெயக்குமார் அறிவித்தார்.
மேலும், தொழுநோயால் நிரந்தரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பராமரிப்பு தொகையாக ரூ.1500 வழங்கப்படும் என்றும் ஜெயக்குமார் அறிவித்தார்.