புதுக்கோட்டை அருகே மூட்டை மூட்டையாய் ரூ.18 கோடி நட்சத்திர ஆமைகள்.. 3 பேர் கைது
18 கோடி ரூபாய் மதிப்புள்ள நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 18 கோடி ருபாய் மதிப்புடைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், அது சம்பந்தமாக 3 பேரையும், மத்திய வருவாய் புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை வழியாக நட்சத்திர ஆமைகள் கடத்தப்பட்டு வருவதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்படி, அவர்கள் திருச்சி புதுக்கோட்டை சாலையில் வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று நிற்காமல் சென்றது.
இதனால் வருவாய் புலனாய்வுத்துறை போலீசார் அந்த காரை துரத்தி சென்றனர். அந்த கார் புதுக்கோட்டை சிப்காட் அருகேயுள்ள ரெங்கம்மாசந்திரம் அருகே உள்ள ஒரு குடோனில் சென்று நின்றது. இதனையடுத்து காரில் இருந்த 3 பேரிடம் விசாரணை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் பதில் அளிக்கவே அவர்களது காரையும் குடோனையும் சோதனை செய்தனர்.
அதில் கூடை கூடையாக நட்சத்திர ஆமை இருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்த அமீன், புரோகான், சையது ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையடுத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சர்வதேச அளவில் பறிமுதல் செய்யப்பட்ட நட்சத்திர ஆமைகளின் மதிப்பு 18 கோடி ருபாய் என்று போலீசாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.