யாரு போராட்டம் நடத்தினா எங்களுக்கு என்ன? அரியலூரில் ஒருநாளைக்கு ரூ.1கோடிக்கு மது விற்பனை
அரியலூர்: டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அரியலூர் மாவட்டம் மது விற்பனையில் ஒருநாளைக்கு ஒரு கோடி ரூபாய்க்கு சாதனை படைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காந்தியவாதி சசி பெருமாளின் மரணத்திற்குப் பின்னர் தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தவேண்டும் என்று அரசியல் கட்சியினர் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்குவது, தீ வைத்து கொளுத்துவது போன்ற போராட்டங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதனையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு விற்பனை நடைபெறுகிறது.
டாஸ்மாக் நிர்வாகம்
தமிழகம் முழுவதும் 5 நிர்வாக மண்டலங்கள், 33 வருவாய் மாவட்டங்கள் என பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாவட்ட மேலாளரின் கீழ் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில், மொத்த டாஸ்மாக் கடைகளில் நாள் ஒன்றுக்கு கிட்டத்திட்ட ரூ.1 கோடி வரை மதுபானங்கள் விற்பனையாகி வருகிறது என்ற அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது.
7 டாஸ்மாக் கடைகள்
அரியலூர் நகர் பகுதியில் மட்டும் 7 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் மட்டும் நாள் ஒன்றுக்கு ரூ.1.50 லட்சம் வரை மதுபானங்கள் விற்பனையாகி வருகிறது. அரியலூரில் விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் ரூ.2 லட்சம் வரை விற்பனை நடைபெறுவதாக புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.
கடையை மூடுவார்களா?
அதிகபட்சமாக ஏலாக்குறிச்சியில் உள்ள டாஸ்மாக் கடையில் தினசரி ரூ.2 லட்சம் வரை மதுபானம் விற்பனையாகி வருகிறது. இளைஞர்களும் கூலித்தொழிலாளர்களும் மதுவிற்கு அடிமையாகி சீரழிந்து வருவதால் சமூக ஆர்வலர்கள் வேதனை அடைந்து வருகின்றனர். டாஸ்மாக்கடைகளை விரைவில் மூடவேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.