சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ. 2.42 லட்சம் கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்து: ஜெ.
சென்னை: தமிழக அரசு சென்னையில் நடத்திய 2 நாள் சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் மொத்தம் ரூ2.42 லட்சம் கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருப்பதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சென்னையில் முதலாவது சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நேற்றும் இன்றும் நடைபெற்றது. சென்னை நந்தம்பாக்கத்தில் நேற்று இம்மாநாட்டை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
கடந்த 2 நாட்களாக கருத்தரங்கள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. இன்று நடைபெற்ற மாநாட்டின் நிறைவு விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:
2 நாட்களாக நடைபெற்ற சர்வதேச முதலீட்ட்டாளர் மாநாடு மிகப் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. கடந்த 2 நாட்களில் மொத்தம் ரூ2,42,160 கோடி (ரூ2.42 லட்சம் கோடி) முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
#TNGIM2015 valedictory concludes.Hon'ble CM greeting signatories of 98 MOUs. pic.twitter.com/bf2iXHmLaa
— Tamil Nadu GIM (@TNGIM2015) September 10, 2015
நிர்ணயித்த இலக்கைவிட 2 மடங்கு முதலீடுகள் கிடைக்க உள்ளன. மொத்தம் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்த மாநாட்டில் கையெழுத்தாகி உள்ளன.
தென் மாவட்டங்களில் ரூ 70 ஆயிரம் கோடிக்கான புரிந்துணர்வு ஓப்பந்தங்கள் போடபட்டு உள்ளன. மொத்தத்தில் 50%க்கும் அதிகமான முதலீடுகள் தென்மாவட்டங்களில் அமைய உள்ளன
வேளாண் துறையில் ரூ 800 கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் ரூ.16 ஆயிரம் கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது.
மின் உற்பத்தியில் ரூ1.07 லட்சம் கோடிக்கான ஒப்பந்தமும் மீன்வளத்துறையில் ரூ.500 கோடிக்கு ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளன.
மிகப்பெரிய கார் உற்பத்தி மையமாக சென்னை உள்ளது. தற்போது சென்னையில் 3 நிமிடத்திற்கு ஒரு கார் தயாராகி வருகிறது. முதலீட்டாளர்களின் சொர்க்க பூமியாகவும், ஆசியாவின் மிகப்பெரிய 3 முதலீட்டு மையங்களில் ஒன்றாகவும் தமிழகம் மாறும்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.