ராமஜெயம் கொலை, ரயில் கொள்ளையில் துப்பு கொடுத்தால் பரிசு - சிபிசிஐடிபோலீஸ் அறிவிப்பு
ராமஜெயம் கொலை, சேலம் ரயிலில் பழைய ரூபாய் நோட்டு கொள்ளை ஆகிய வழக்குகளில் துப்பு துலக்க தகவல்களை அளிப்பவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என சி.பி.சி.ஐ.டி போலீஸ் அறிவித்துள்ளது.
திருச்சி: ராமஜெயம் கொலை, சேலம் ரயிலில் பழைய ரூபாய் நோட்டு கொள்ளை ஆகிய வழக்குகளில் துப்பு துலக்க தகவல்களை அளிப்பவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என சி.பி.சி.ஐ.டி போலீஸ் அறிவித்துள்ளது.
திருச்சி மாநகரத்தை சேர்ந்த ராமஜெயம் 2012ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அதிகாலை நடைபயிற்சிக்காக செல்லும் போது கொலை செய்யப்பட்டார். இந்த கொலையாளிகளை பிடிக்க முதலில் 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் தனிப்படையால் வழக்கில் துப்பு துலக்க முடியவில்லை.
இதையடுத்து ராம ஜெயம் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. டி.எஸ்.பி. மலைச்சாமி தலைமையில் தற்போது 16 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
5 ஆண்டுகளாக திணறல்
ராமஜெயம் கொலையை பொறுத்தவரை போலீசாருக்கு கிடைத்த முக்கிய தடயம் அவர் பயன்படுத்திய செல்போன்களின் எண்கள் மட்டுமே. அந்த எண்களுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டவர்கள், இரவு நேரத்தில் தொடர்பு கொண்டு பேசியவர்கள் பட்டியல் தனித் தனியாக தயாரிக்கப்பட்டுள்ளது. தலைகீழாக நின்று தண்ணீர் குடித்து விட்டனர் சிபிசிஐடி போலீசார். கொலை நடந்து 5 ஆண்டுகளாகியும் கொலையாளியின் நிழலைக்கூட நெருங்க முடியவில்லை.
ரயிலில் பணம் கொள்ளை
இதே போல கடந்த ஆண்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி சேலத்தில் இருந்து சென்னை வந்த சேலம்-சென்னை விரைவு ரயில் பார்சல் வேனில் எடுத்து வரப்பட்ட பணத்தில் ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. இந்த இரண்டு வழக்குகளையும் தமிழக குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை விசாரணை செய்து வருகிறது.
ரூ. 2 லட்சம் வெகுமதி
இந்த வழக்கில் துப்பு துலக்க பயனுள்ள தகவல்களை அளிப்பவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.
இந்த வழக்கு குறித்து தொலைபேசி, செல்போன் மற்றும் வாட்ஸ்அப் மூலமாக பொதுமக்கள் தகவல் தரலாம். அவர்களின் பெயர்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.
தொடர்பு கொள்ள எண்கள்
இதுகுறித்த தகவல் தர 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள வேண்டிய பெண்கள் : 044-28511600, செல்போன்-வாட்ஸ்அப் எண்கள்: 99400 22422, 99400 33233 ஆகும். இனியாவது சிபிசிஐடி போலீசாருக்கு துப்பு கிடைக்குமா பார்க்கலாம்.