அசந்து தூங்கிய காவலாளி… ஏ.டி.எம் இயந்திரத்தில் ரூ.21 லட்சத்தை அபேஸ் செய்த கொள்ளையர்கள்
புதுச்சேரி: புதுச்சேரி அருகே கனரா வங்கியின் ஏடிஎம்மில் கள்ளசாவி போட்டு திறந்து ரூ.21 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புதுச்சேரி - கடலூர் மெயின் ரோட்டில் தவளக்குப்பம் பகுதியில் உள்ள கனரா வங்கியின் அருகில் ஏடிஎம் மையம் அமைந்துள்ளது. நேற்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் மர்ம நபர்கள் சிலர் ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்துள்ளனர். அங்குள்ள ஏடிஎம் இயந்திரத்தை கள்ளச் சாவி மற்றும் ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி திறந்து அதில் இருந்த 20 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இந்த ஏடிஎம் மையத்தில் அதே பகுதியைச் சேர்ந்த துரைசாமி (57) என்பவர் காவலாளியாக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த அவர், உடல் நலக்குறைவு காரணமாக அருகில் உள்ள சிறிய அறையில் உறங்கியுள்ளார்.
அதிகாலை 4.30 மணிக்கு கண் விழித்தபோது, ஏடிஎம் இயந்திரம் திறந்து கிடந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே, அருகில் உள்ள போலீஸ் நிலையத் துக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த தவளக்குப்பம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பற்றி வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
‘நான் தூங்கி கொண்டிருந்த நேரத்தில் கொள்ளை நடந்து விட்டது' என்று காவலர் துரைசாமி போலீசில் கூறியுள்ளார். அருகில் உள்ள தனியார் மோட்டார் நிறுவன காவலாளிகளிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஏடிஎம் இயந்திரத்தின் ரகசிய எண் மூலமாக திறந்து கொள்ளையடித்துச் சென்றதால் வங்கிக்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர். எனவே, இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்பி தெய்வ சிகாமணி, "ஏடிஎம் மில் நேற்று முன்தினம் மாலை ரூ.17.5 லட்சம் பணம் நிரப்பப்பட்டுள்ளது. ஏற்கெனவே, ரூ.4 லட்சம் வரை பணம் இருந்ததாக வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர். அதில், ரூ.20 லட்சத்து 80 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும், வங்கிக்கு சம்மந்தப்பட்டவர்கள், ரகசிய எண்ணை தெரிந்தவர்கள்தான் கொள்ளையில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஏடிஎம் இயந்திரத்தை உடைத்ததற்கான தடயங்கள் ஏதும் இல்லை. மர்ம நபர்கள் ஏடிஎம் மையத்துக்குள் சுமார் 7 நிமிடங்கள் வரை இருந்துள்ளனர். முகம் பதிவாகாமல் இருக்க சிசிடிவி கேமராவை சேதப்படுத்திவிட்டு கொள்ளையர்கள் தப்பி ஓடியுள்ளனர் என்றார்.