நெல்லை மேயர் புவனேஸ்வரி மீது பண மோசடி வழக்கு: விசாரணையை தள்ளி வைத்தது மதுரை கோர்ட்
மதுரை: மோசடி புகாரில் நெல்லை அதிமுக மேயர் புவனேஸ்வரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட மனு மீதான விசாரணை. வரும் 29ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த முத்துக்கண்ணன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ''எனது நிறுவனத்தின் கிளையை நெல்லையில் அமைப்பதற்காக அலுவலகத்திற்கு இடம் பார்த்தேன். பாளையங்கோட்டையிலுள்ள ஒரு வணிக வளாகத்தில் கடை காலியாக இருப்பதாக தகவல் கிடைத்தது.
கடைக்கான ஒப்பந்தம் மற்றும் சாவியை பெற நெல்லை அதிமுக மேயர் புவனேஸ்வரிக்கு ரூ.3 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என கூறினர். இந்த பணத்தை மேயரின் உதவியாளரிடம் கொடுத்தேன். அதன் பிறகு கடை சாவியை கொடுத்தனர். ஆனால் வாடகை ஒப்பந்தத்தை தரவில்லை. இதனிடையே, ஆக.2ல் கடையை பூட்டி சீல் வைத்தனர்.
மேயர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் கூட்டு சேர்ந்து என்னிடம் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து நெல்லை போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோரிடம் புகார் அளித்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். மனுவை நேற்று விசாரித்த நீதிபதி எஸ்.விமலா, மனு மீதான விசாரணையை 29ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.