சேகர் ரெட்டியிடம் ரூ.300 கோடி லஞ்சம்... ஐடி கடிதத்தால் எடப்பாடி அரசுக்கு புதிய தலைவலி
சேகர் ரெட்டியிடம் ரூ.300 கோடி லஞ்சம் பெற்ற அமைச்சர்கள், எம்எல்ஏ, மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருமான வரித் துறை அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர்.
சென்னை: சேகர் ரெட்டியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் ரூ.300 கோடி லஞ்சம் பெற்றதாக குறிப்பு இருப்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருமான வரித்துறையினர் கடிதம் எழுதியுள்ளனர்.
மணல் மாபியாவும், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவராகவும் இருந்த சேகர் ரெட்டி தமிழக அரசின் பல்வேறு ஒப்பந்தங்களை எடுத்து செய்து வந்தார். இவர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோருக்கு மிகவு்ம் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.
அவரது வீட்டில் கடந்த டிசம்பர் மாதம் வருமான வரித்துறையினர் தொடர்ந்து இரு நாள்கள் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் மொத்தம் ரூ.138 கோடி ரொக்கமும், 157 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
மூட்டை மூட்டையாக...
மேலும் வெவ்வேறு வங்கிகளில் ரூ.500 கோடி அளவுக்கு முதலீடு செய்ததற்கான ஆவணம், ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களும் சிக்கியுள்ளன. மொத்தம் 10 மூட்டை அளவுக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் சிக்கியுள்ளன.
ரூ.2000 நோட்டுகள்
மத்திய அரசின் பணமதிப்பிழப்புக்கு பின்னர் புதிய ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் அவை புழக்கத்தில் வருவதற்குள் சேகர் ரெட்டியின் வீட்டில் கட்டு கட்டுக்காக புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து வருமான வரித்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
முக்கிய டைரி சிக்கியது
மேலும் அங்கிருந்து முக்கிய டைரி ஒன்றும் கைப்பற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து சேகர் ரெட்டி, சீனிவாசலு, ஆடிட்டர் பிரேம் குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். சேகர் ரெட்டியிடம் நடத்திய விசாரணையின் பேரில் மாநில அரசின் தலைமை செயலாளராக இருந்த ராமமோகனராவ் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்து பணம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
ரூ.300 கோடி லஞ்சம்
பல்வேறு ஒப்பந்தங்களை பெறுவதற்காக தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், மூத்த அதிகாரிகள் ஆகியோருக்கு சேகர் ரெட்டி லஞ்சம் வழங்கியதாக டைரியில் குறிப்பு உள்ளது. இதனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு வருமான வரித்துறையினர் கடிதம் அனுப்பியுள்ளனர். இதனால் எடப்பாடி அரசுக்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது.