ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலையொட்டி டாஸ்மாக்கில் ரூ.35 கோடிக்கு மது விற்பனை
திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலையொட்டி திருச்சியில் ரூ.35 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் முதல்வர் பதவியையும், ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார். இதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அதிமுக அமைச்சர்கள் குழு ஸ்ரீரங்கத்தில் முகாமிட்டு இடைத்தேர்தல் வேலைகளை கவனித்தது. திமுக, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் ஸ்ரீரங்கத்திற்கு சென்று வாக்கு சேகரித்தனர். இந்நிலையில் கடந்த 13ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.
இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தேர்தலையொட்டி திருச்சியில் ரூ.35 கோடிக்கு மது விற்பனையானது தெரிய வந்துள்ளது. பிப்ரவரி 1ம் தேதி முதல் 11ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட ரூ.6 கோடிக்கு கூடுதலாக மது விற்றுள்ளது. மேலும் இடைத்தேர்தல் நடந்த ஸ்ரீரங்கத்தில் வழக்கத்தை விட ரூ.4 கோடிக்கு கூடுதலாக மது விற்பனையாகியுள்ளது.
தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு மது, பிரியாணி, பணம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.