குவைத்தில் இருந்து நூதன முறையில் ரூ.40 லட்சம் தங்கம் கடத்திய கேரள வாலிபர் சென்னையில் கைது
சென்னை: குவைத்தில் இருந்து சென்னைக்கு ரூ.40 லட்சம் மதிப்பு உள்ள தங்கத்தை நூதன முறையில் கடத்தி வந்த கேரள வாலிபரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.
குவைத்தில் இருந்து விமானம் ஒன்று புதன்கிழமை அதிகாலை சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த பிரகாஷ்(28) சுற்றுலா விசாவில் குவைத் சென்று திரும்பியிருந்தார். கோழிக்கோட்டுக்கு நேரடியாக விமானம் இருக்கையில் அவர் எதற்காக சென்னை வந்தார் என்று அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து அதிகாரிகள் அவரின் உடைமைகளை சோதனை செய்ததில் அதில் சந்தேகப்படும்படி எதுவும் இல்லை. ஆனால் அவரின் சூட்கேஸின் கைப்பிடி மற்றும் வித்தியாசமாக இருந்தது. உடனே அதிகாரிகள் அந்த கைப்பிடியை கழற்றி சோதனை செய்தனர்.
சோதனையில் பிரகாஷ் கைப்பிடியை தங்கத்தில் செய்து அதில் வெள்ளி முலாம் பூசி நூதன முறையில் தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. 1 கிலோ 350 கிராம் தங்கத்தில் ஆன அந்த கைப்பிடியின் மதிப்பு ரூ.40 லட்சம் ஆகும்.
அதிகாரிகள் கைப்பிடியை பறிமுதல் செய்தனர். தங்கம் கடத்தி வந்த பிரகாஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.