பாஜக பிரமுகர் கடையில் ரூ. 45 கோடி பழைய நோட்டுக்கள் வந்தது எப்படி?- வருமான வரித்துறை விசாரணை
சென்னையில் பாஜக பிரமுகருக்கு சொந்தமான துணிக்கடையில் ரூ.45 கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் சிக்கிய வழக்கு வருமான வரித்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. பணத்தை மாற்றிய அரசியல் பிரமுகர்கள் யார் யார் என்ற
சென்னை: சென்னையில் பாஜக பிரமுகர் தண்டபாணி என்பவருக்குச் சொந்தமான துணிக்கடையில் ரூ.45 கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு வருமான வரித்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. பணத்தை மாற்றிய அரசியல் பிரமுகர்கள் யார் யார் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே பாஜக பிரமுகர் தண்டபாணி என்பவருக்கு சொந்தமான துணிக்கடை உள்ளது. இங்கு காவல்துறையை சேர்ந்தவர்களுக்கான சீருடைகள் தயாரித்து கொடுப்பது வழக்கம். இந்த நிலையில் இந்த கடையில் ரூ.45 கோடி மதிப்புடைய பழைய ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அந்த கடையில் சோதனை நடத்தியபோது கட்டுகட்டாக கிட்டத்தட்ட ரூ.45 கோடி பழைய ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தற்போது அந்த கடையின் உரிமையாளரும், பாஜக பிரமுகருமான தண்டபாணியிடம் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் யாரிடமிருந்து பணத்தை வாங்கினார், சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்வதற்காக பணத்தை மாற்றிக் கொடுப்பதற்காக பதுக்கி வைத்திருந்தாரா என விசாரணை நடைபெற்று வருகிறது.
பணமதிப்பு நீக்கம்
கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதியன்று பழைய 100 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு ஏராளமான பொதுமக்கள் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருந்து புதிய ரூபாய் நோட்டுக்களை மாற்றினர்.
சட்ட விரோத பணபரிமாற்றம்
முக்கிய அரசியல் பிரமுகர்கள் தங்களிடம் இருந்த கறுப்பு பணத்தை கமிஷன் அடிப்படையில் புதி மாற்றிக்கொண்டனர். சட்டவிரோதமாக பணபரிமாற்றம் செய்ததாக ஏற்கனவே பல வங்கி அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பல தொழிலதிபர்கள் கம்பி எண்ணிக்கொண்டிருக்கின்றனர். பழைய ரூபாய் நோட்டுக்கள் 5 அல்லது 10க்கு மேல் வைத்திருப்பது சட்ட விரோதம் என்றும் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டு கட்டாக நோட்டுக்கள்
இந்த நிலையில் பாஜக பிரமுகர் தண்டபாணி என்பவருக்குச் சொந்தமான சொந்தமான துணிக்கடையில் கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.45 கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் சிக்கியுள்ளது. இந்த வழக்கு வருமான வரித்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் வருமான வரித்துறையினர் விரைவில் விசாரணையை தொடங்க உள்ளனர்.
வருமான வரித்துறை கிடுக்கிப் பிடி
தண்டபாணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான கடைகளில் வேறு எதுவும் பணம் பதுக்கப்பட்டுள்ளதா? அவரிடம் கமிஷன் அடிப்படையில் பணத்தை மாற்றிய அரசியல்வாதிகள் யார் யார் என்றும் விசாரணை நடைபெற உள்ளது. வருமான வரித்துறையினரின் விசாரணைக்குப் பிறகே கமிஷன் அடிப்படையில் பணத்தை மாற்றிய அரசியல் பிரமுகர்கள் யார் என்ற தகவல் தெரியவரும். பழைய ரூபாய் நோட்டுக்கள் அதிக அளவில் கிடைக்கும் பட்சத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் இந்த வழக்கில் விசாரணை நடத்துவார்கள் என்று தெரிகிறது.