ரயில் பெட்டியில் ஓட்டை போட்டு ரூ.5.75 கோடி கொள்ளை- போலீஸ் எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை
சென்னை: சேலத்தில் இருந்து சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் அனுப்பப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் 5.75 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக ரயில்வே போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சேதம் அடைந்த, பழமையான, கசங்கிய ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என மத்திய ரிசர்வ் வங்கி கடந்த சில மாதங் களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
இதைத் தொடர்ந்து சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ளவர்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை அந்த பகுதியில் உள்ள வங்கிகளில் கொடுத்து மாற்றினர்.
இதில் 342 கோடி ரூபாயை சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்ல வங்கி அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி இந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தும் 226 மரப்பெட்டிகளில் ரூ.10, ரூ.100, ரூ.500, ரூ.1000 நோட்டுகளாக தனித்தனியாக அடுக்கி கட்டப்பட்டன.
பின்னர், அவை சேலத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் தனிப்பெட்டியில் நேற்று முன்தினம் ஏற்றப்பட்டு சீல் வைக்கப்பட்டது. அதற்கு ஒரு டிஎஸ்பி தலைமையில் 10 போலீசார் துப்பாக்கியுடன் பாதுகாப்புக்காக வந்தனர்.
சேலத்தில் இருந்து ரயில் சரியாக திங்கட்கிழமை இரவு 9 மணிக்கு புறப்பட்டது. பணம் இருக்கும் பெட்டியில் அமர யாருக்கும் அனுமதி கிடையாது. எனவே, பணம் உள்ள ரயில் பெட்டிக்கு முன் பெட்டியிலும், பின் பெட்டியிலும் ரயில்வே பாதுகாப்பு போலீசார் வந்தனர்.
செவ்வாய்கிழமை காலை 8 மணிக்கு ரயில் எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. பின்னர், பயணிகளை இறக்கிவிட்டு யார்டுக்கு சென்றது. அங்கு பணம் இருக்கும் பெட்டி மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு மீண்டும் காலை 11 மணிக்கு அந்த பெட்டி எழும்பூர் ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இதுகுறித்து சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் எழும்பூர் ரயில் நிலையம் சென்றனர். அங்கு ரயில் பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த சீலை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரயில் பெட்டியின் மேற்கூரை வெல்டிங் கருவி மூலம் உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
500 ரூபாய் கட்டுகள்
அந்த பெட்டியில் இருந்த 4 மரப்பெட்டிகளை உடைத்து உள்ளே இருந்த 500 ரூபாய் கட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
5வது பெட்டியில் ரூ.10, ரூ.20 நோட்டுகள் இருந்ததால் அவற்றை கொள்ளையர்கள் அங்கேயே போட்டுவிட்டு போய்விட்டனர். தமிழகத்தில் ஓடும் ரயிலில் சினிமா பாணியில் பல கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரூ. 5 கோடி பணம்
கொள்ளை போன பணத்தின் மதிப்பு ரூ.5.75 கோடி வரை இருக்கும் என ரயில்வே போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளைபோன பணத்தின் சரியான மதிப்பை அறிய மீதம் உள்ள பணத்தை எண்ணும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கொள்ளை குறித்து எழும்பூர் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தடயவியல் நிபுணர்கள் ஆய்வு
கொள்ளை நடந்த இடத்துக்கு தடய வியல் நிபுணர் பஞ்சாட்சரம் தலைமை யிலான தனிப்படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கொள்ளையர்களின் ரேகை களை சேகரித்தனர். விரைவில் அதன் அறிக்கையை எழும்பூர் ரயில்வே போலீசிடம் கொடுக்க உள்ளனர்.
கொள்ளையடித்தது யார்
பணத்தை யார் எப்படி கொள்ளையடித்தனர் என்பது இன்னும் கண்டுபிடிக்கவில்லை. பணம் குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போலீசில் புகார் செய்துள்ளனர். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
எப்.ஐ.ஆர் விபரங்கள்
ரயிலில் பல வங்கிகளுக்குச் சொந்தமான பணக்கட்டுக்கள் கொண்டு வரப்பட்டன. இதில் ஐ.ஓ.பி வங்கிக்குச் சொந்தமான 5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 226 பெட்டிகளில் பணக்கட்டுக்கள் கொண்டு வரப்பட்டன.
பலருக்கு தொடர்பு
இந்த துணிகர கொள்ளையை ஒருவர் மட்டும் செய்திருக்க வாய்ப்பு இல்லை என்று ரயில்வே போலீசார் கூறியுள்ளனர். பலர் சங்கிலி தொடர்போல் செயல்பட்டிருக்க வேண்டும். அதை அடிப்படையாக வைத்தே விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார். ரயில் பெட்டியில் ஒட்டியிருந்த ரத்தத்துளிகளையும் போலீசார் சேகரித்து சோதனைக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.