அடங்க மறுக்கும் அரவக்குறிச்சி... தேர்தலை தள்ளி வைத்தும் ஓயலை.. இன்று ரூ. 5.76 லட்சம் சிக்கியது!
கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ள போதிலும் கூட கணக்கில் வராத பணப்புழக்கம் தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளது.
இன்று பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில் எந்தக் கணக்கு வழக்கும் இல்லாத ரூ. 5.76 லட்சம் பணம் சிக்கியது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
திமுக சார்பில் கே.சி. பழனிச்சாமியும், அதிமுக சார்பில் செந்தில் பாலாஜியும் இத்தொகுதியில் போட்டியிடுகின்றனர். இங்கு மிகப் பெரிய அளவில் பணப் பட்டுவாடா நடந்திருப்பதாக வந்த புகார்களைத் தொடர்ந்தும், பெருமளவில் பணம் சிக்கியதாலும் இங்கு தேர்தலை வருகிற 23ம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்துள்ளது. இதேபோல தஞ்சையிலும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று அங்கு பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில் ரூ. 5.76 லட்சம் பணம் சிக்கியது. இதற்குக் கணக்கு ஏதும் இல்லை. இதையடுத்து அதை அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் சேர்த்தனர்.