அ.தி.மு.க. எம்.பி.யிடம் ரூ.50 ஆயிரம் கொள்ளை... ஓடும் ரயிலில் மர்ம நபர் கைவரிசை
தமிழக ஆளும் கட்சியின் எம்.பி. ஏ.கே. செல்வராஜிடம் ரூ. 50 ஆயிரம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: ஆளும் கட்சியான அ.தி.மு.கவின் ராஜ்ய சபா எம்பியிடம் இருந்து ஓடும் ரயிலில் 50 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அவரின் கட்சி பிரமுகர்கள் மத்தியிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க. மாநில அமைப்புச் செயலாளராவும், ராஜ்ய சபா எம்பியுமாக இருப்பவர் கோவை ஏ.கே. செல்வராஜ். இவர் கடந்த 16-ம் தேதி சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான மேட்டுப்பாளையத்துக்கு புறப்பட்டார்.
இதற்காக சென்னையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு புறப்பட்ட நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் குளிர்சாதன பெட்டியில் ஏறிப் பயணித்தார்.
ரயில் அதிகாலை 5.30 மணியளவில் கோவை அருகே வந்த போது ஏ.கே.செல்வராஜ் எம்.பி. வைத்திருந்த கைப்பை திடீரென மாயமானது. அதில் ரூ. 50 ஆயிரம் பணம் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த எம்.பி. கைப்பையை தேடி பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை.
பின்னர், ரயில் கோவை வந்ததும் ரயில்வே போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப் பதிவு செய்து எம்.பி.யின் பணத்தை திருடிச் சென்ற மர்மநபரை தேடி வருகிறார்.
மேலும், அந்தப் பெட்டியில் பயணம் செய்தது யார், சந்தேகப்படும்படியாக யாராவது பெட்டியில் ஏறினார்களா, கோவைக்கு முந்தைய ரயில் நிலையமான திருப்பூர் ரயில் நிலையத்தில் குளிர்சாதன பெட்டியில் இருந்து யாராவது இறங்கினார்களா என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.