ரூ.500 நோட்டு வாங்க மறுப்பு.. அறுவை சிகிச்சைக்காக வந்த கண் நோயாளிகளை அலை கழித்த மருத்துவமனை
ரூ.500 நோட்டு செல்லாது என்ற காரணத்தைக் காட்டி கண் அறுவை சிகிச்சைக்காக வந்த நோயாளிகளை நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனை அலைகழித்துள்ளது.
திருநெல்வேலி: நேற்றில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதனால் நேற்று 26 கண் நோயாளிகளிடம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வாங்க மறுத்து, சிகிச்சை அளிக்க மறுத்துள்ளது தனியார் மருத்துவமனை நிர்வாகம். இதனால் அவர்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள்.
நேற்று முன் தினம் பிரதமர் மோடி திடீரென்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன் படி, நேற்றில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாகிப் போனது. இதனால் இந்திய முழுவதும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். கையில் பணம் இருந்தும் ஏழைகள் போல் ஆனார்கள். செலவுகள் செய்ய முடியவில்லை. வங்கியில் இருந்து பணம் எடுக்கலாம் என்றாலும் வங்கிகளும் இயங்கவில்லை. அனைத்து ஏடிஎம்களும் மூடப்பட்டன.
இந்நிலையில், நேற்று திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்காக சென்ற 26 கண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் மருத்துவமனை அவர்களை அலைகழித்துள்ளது.
மருத்துவமனையின் அறிவுறுத்தலின் படி, 26 பேருக்கும் நேற்று கண் அறுவை சிகிச்சை செய்வது என்று முடிவானது. இதன் அடிப்படையில், நேற்று 26 பேரும் மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள சென்றுள்ளனர். அப்போது, சிகிச்சைக்கான கட்டணத்தை 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களாக செலுத்த முற்பட்டனர். இதனை மருத்துவமனை நிர்வாகம் வாங்க மறுத்துவிட்டது. மேலும், கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், இண்டர்நெட் பேங்கிங் மூலம் பணம் கட்டினால்தான் சிகிச்சை அளிக்க முடியும் என்றும் கண்டிப்பாக கூறிவிட்டது.
இதனால் என்ன செய்வதென்று தெரியாத நோயாளிகளும், அவர்களது உறவினர்களும், எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் மருத்துவமனை நிர்வாகம் மனம் இறங்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் மருத்துவமனையின் முன்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அப்படி இருந்தும் மருத்துவமனை நிர்வாகம் அதனை பொருட்படுத்தவில்லை. பின்னர், நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களிடம் இருந்த டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் மூலம் பணம் செலுத்திய பின்னரே கண் அறுவை சிகிச்சை நடைபெற்றது.