திருப்பூரில் கண்டெய்னர்களுடன் பிடிபட்ட ரூ570 கோடி மர்மம்... இன்னமும் விலகாத முடிச்சுகள்
கோயம்புத்தூர்: இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது 3 கண்டெய்னர் லாரிகளில் சிக்கிய ரூ570 கோடி பணம்... எஸ்.பி.ஐ. வங்கி அதிகாரிகள் தங்களுடையதுதான் இந்த பணம் என உரிமை கோரினாலும் தேர்தல் ஆணையம் இன்னமும் திருப்தி அடையாத வகையில் அத்தனை முடிச்சுகள் இதில் சிக்கியிருக்கின்றன.
சட்டசபை தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்ட பல கோடி ரூபாய் பணத்தைத் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை அதிகாரிகள் விரட்டி விரட்டி பறிமுதல் செய்தனர். இத்தகைய நடவடிக்கையில் ஒன்றுதான் திருப்பூர் அருகே சினிமா பாணியில் நடந்த 'சேசிங்' சம்பவம்...
கோயம்புத்தூரில் இருந்து புறப்பட்ட 3 கண்டெய்னர் லாரிகளை சந்தேகத்தின் பேரில் பறக்கும் படை அதிகாரிகள் தடுத்து நிறுத்த முயற்சித்தனர்... ஆனால் அந்த கண்டெய்னர் லாரிகளோ நிற்காமல் தப்பிச் சென்றன... பின்னர் திருப்பூர் அருகே 3 கண்டெய்னர் லாரிகளும் மடக்கப்பட்டன. அப்போதுதான் அந்த கண்டெய்னர் லாரிகளில் ரூ570 கோடி பணம் இருக்கிறது என்ற அதிர வைக்கும் தகவல் வெளியானது.
ஆவணங்களில் குழப்பம்
கோயம்புத்தூரில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி முதன்மை கிளையில் இருந்து ஆந்திராவில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி கிளைக்கு பணம் கொண்டு செல்லப்படுவதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட தேர்தல் அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்த போது அவர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சிதான் காத்திருந்தது. இவ்வளவு பெரிய தொகையை கொண்டு செல்லும் நிலையில் அவர்கள் வைத்திருந்த ஆவணங்களில் வேறுபாடுகள் இடம்பெற்றிருப்பதை கண்டுபிடித்தனர்.
உருப்படியான பதில் இல்லையே...
சரி... வங்கிக்காக இவ்வளவு பெரிய தொகையை எடுத்துச் செல்கிறார்கள் என வைத்துக் கொண்டால்... அதற்கு பாதுகாப்பாக சென்றவர்கள் உரிய சீருடை அணியாமல் இருந்தது ஏன்? என்ற கேள்விக்கு விடை இல்லை. லுங்கி அணிந்தபடி இரவோடு இரவாக இந்த பணத்தை ஏன் எடுத்து சென்றீர்கள்? என்ற கேள்விக்கும் கண்டெய்னர் லாரிகளில் இருந்தவர்களிடம் இருந்து முறையான பதில் கிடைக்கவில்லையாம்.
விதிகள் கிடையாதே...
என்னதான் எஸ்.பி.ஐ. வங்கி அதிகாரிகள் இந்த பணத்தை விசாகப்பட்டினம் கிளைக்குதான் எடுத்துச் செல்கிறோம் என அடித்து கூறினாலும் தேர்தல் அதிகாரிகளுக்கு சந்தேகம் தீர்ந்தபாடில்லை. ஏனெனில் இவ்வளவு பெரிய பணத்தை இரவோடு இரவாக ஒரு வங்கி கிளையில் இருந்து மற்றொரு வங்கிக் கிளைக்கு மாற்றுவதை அனுமதிக்கக் கூடிய எந்த ஒரு எழுதப்பட்ட விதியுமே இல்லை. அடுத்ததாக வங்கிக்கான பணத்தை எடுத்துச் சென்றவர்கள் அணிந்திருந்த உடை பெரும் குழப்பத்துக்கும் காரணம். அதுவும் செக்யூரிட்டி என கூறிக் கொண்டு லுங்கி அணிந்திருந்த நபர்கள் எந்த ஒரு கேள்விக்குமே முறையான பதிலை அளிக்கவே இல்லை. இருந்தபோதும் எல்லாம் முறைப்படிதான் செய்து கொண்டிருக்கிறோம் என சொல்லிக் கொண்டிருக்கிறது எஸ்.பி.ஐ. நிர்வாகம்...
சிபிஐ விசாரணை
தற்போது இந்த ரூ570 கோடி விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூட, இவ்வளவு பெரிய தொகையை வங்கிகள் இப்படி கொண்டு சென்றது குறித்து நான் கேள்விப்பட்டது கிடையாது; இது குறித்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். எப்பொழுதுதான் ரூ570 கோடியின் மர்ம முடிச்சுகள் அவிழுமோ?