திருச்சி, கரூர் வாகன சோதனையில் ரூ.65 லட்சம் சிக்கியது
திருச்சி: திருச்சி, கரூர் மாவட்டங்களில் வருவாய்துறை அதிகாரிகள் மேற்கொண்ட வாகன சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.65 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் அடுத்த ஏப்ரல் 24-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் விதிமுறைகள் அமுலுக்கு வந்துள்ளதால் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக உரிய ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.
இதை தொடர்ந்து தேர்தல் கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் தலைமையில் கரூர் மாவட்டம் மணவாசி டோல்கேட்டில் தீவிர வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக மணிகண்டன் உள்பட 3 பேர் வந்த காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.30 லட்சம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து பணத்தையும், அவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலத்தில் ஒப்படைத்தனர். ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்றுச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல குளித்தலை மருதூர் பிரிவு சாலை அருகே சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தர்ராஜன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் ரூ.12 லட்சம் இருந்தது. இது தொடர்பாக காரில் இருந்த கரூரை சேர்ந்த கவுசர் பாய் மற்றும் ரங்கராஜிடம் விசாரணை நடத்திய போது உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டதால் பணம் மற்றும் காரையும் பறிமுதல் செய்த போலீசார் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் குளித்தலை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் தூவாக்குடி அருகே உள்ள புதுக்குடி சுங்க சாவடியில் நடராஜன் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன தணிக்கை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த கும்பகோணம் பி.நகரை சேர்ந்த சேகர் என்பவர் கொண்டு வந்த ரூ.1 லட்சம், தஞ்சையிலிருந்து திருச்சிக்கு காரில் வந்த சேலம் அசோக்நகரை சேர்ந்த ரமேஷ் என்பவரிடம் இருந்து ரூ.80 ஆயிரமும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் திருச்சி பொன்மலையை சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் சிட்டி பாபுவிடம் இருந்து ரூ.9 லட்சம், கும்பகோணம் கோ.சி. மணிநகரை சேர்ந்த கார்த்திக்கேயனிடம் இருந்து ரூ.5 லட்சம், மன்னார்குடி கிருஷ்ணாநகரை சேர்ந்த லட்சுமிநாராயணன் என்பவரிடம் இருந்து ரூ.7 லட்சம் என 3 பேரிடமும் சேர்ந்து ரூ.21 லட்சம் சிக்கியதில் உரிய ஆவணங்களை அவர்கள் காண்பித்ததால் பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
திருச்சி ஏர்போர்ட் அருகே புதுத்தெரு சோதனை சாவடியில் தாசில்தார் ஆறுமுகம் தலைமையிலான பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தை சேர்ந்த வில்சன் ஆனந்த் என்பவர் வந்த காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த ரூ.1 லட்சத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதிகாரிகளின் தீவிர வாகன சோதனையில் ஒரே நாளில் திருச்சி மாவட்டத்தில் மட்டும் ரூ.23 லட்சத்து 80 ஆயிரம் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கைப்பற்றப்பட்ட பணம் அரசு கருவூலத்தில் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களை காண்பித்து அவற்றை பெற்றுச் செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.