ஓட்டுக்கு ரூ.1,000 முதல் ரூ. 7 ஆயிரம் வரை வினியோகம்.. ஆர்.கே.நகரில் மீண்டும் பணப்பட்டுவாடா!
ஆர். கே.நகரில் ஒரு ஓட்டுக்கு ரூ.7000 வரை பணம் கொடுத்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் மக்களின் ஓட்டுகளை பெற அரசியல் கட்சிகள் கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைப்பதைத் பார்த்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே மட்டும் உள்ளதால் அனைத்து கட்சிகளும் உச்சகட்ட பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிளவுபட்டு தேர்தலை சந்திக்கிறது. சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். ஓபிஎஸ் அணியில் மதுசூதனன் வேட்பாளராக களத்தில் உள்ளார்.
ஆர்.கே. நகரில் எப்படியும் வெற்றி வாகை சூட வேண்டும் என இரு அணியினரும் பம்பரமாக சுழன்று வருகின்றனர். திமுகவும் தனது பங்கிற்கு ஓட்டு வேட்டையில் இறங்கியுள்ளது. பாஜக, சிபிஎம், தேமுதிகவை பொருத்த வரை கணிசமான வாக்குகளையாவது பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதற்கிடையே ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவும் களத்தில் உள்ளார்.
இதற்கிடையில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக அரசியல் கட்சிகள் மீது சரமாரியாக புகார்கள் தேர்தல் ஆணையத்தில் குவிந்து வருகிறது. டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் மீது ஓ.பி.எஸ். அணியினரும், ஓ.பி.எஸ். அணி மீது தினகரன் ஆதரவாளர்களும் புகார் கொடுத்துள்ளனர்.
பணப்பட்டுவாடா செய்ததாக டி.டி.வி.தினகரன் ஓ.பன்னீர்செல்வம் அணியினரும், தி.மு.க. வினரும் சிக்கியுள்ளனர். பணப்பட்டுவாடா குறித்து ஒருவரை ஒருவர் மாறி மாறி புகார் கூறினாலும் வாக்காளர்களுக்கு பணம் வினியோகமும் ஒருபுறம் நடப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ஒரு பிரிவினர் ஒரு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் வீதம் பணம் கொடுத்ததுவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்சி ஓட்டுக்கு ரூ.2 ஆயிரமும் மற்றொரு கட்சி ஓட்டுக்கு ரூ.1000-ம் வாக்காளர்களுக்கு கொடுத்துள்ளதாக தகவல் பரவியது.
ஏற்கனவே ரூ.4 ஆயிரம் பெற்ற வாக்காளர்கள் இப்போது 2 கட்சிகள் கொடுத்த ரூ.3 ஆயிரத்தையும் சேர்த்து மொத்தம் ரூ.7 ஆயிரம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இவை அனைத்தையும் தேர்தல் ஆணையம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இதேபோல் அதிக அளவில் பணப்பட்டுவாடா நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.