ரூ.7 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்கள் சென்னையில் பறிமுதல்
சென்னை: சென்னை மணலி அருகே ரூ. 7 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
சென்னை மணலியில் உள்ள ஒரு தனியார் இறக்குமதி நிறுவனத்தின் கிட்டங்கியில் மலேசியாவில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்டிருக்கும் தடை செய்யப்பட்ட சிகரெட் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் அடிப்படையில், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அந்த கிட்டங்கியில், மலேசியாவில் இருந்து கடந்த 14-ஆம் தேதி வந்த ஒரு சரக்கு பெட்டகத்தை சோதனையிட்டனர். இந்த சோதனையில், பிளைவுட் சீட்டுகளுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு சிகரெட்கள் சிக்கின. சுமார் 7௦௦ அட்டைப்பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த சிகரெட்களின் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 7 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அந்த பெட்டிகளை பறிமுதல் செய்து, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்தனர். இதில் அந்த சிகரெட்டுகள், இந்தோனேஷியாவில் பிரபலமான நிறுவனத்தைச் சேர்ந்தது என்பதும், இந்த சிகரெட்கள் சிங்கப்பூர் நாட்டிலிருந்து சென்னைக்கு இறக்குமதியானதாக தெரியவந்துள்ளது. இந்த சிகரெட்டுகளை, இங்கு கொண்டு வந்த இறக்குமதியாளரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தேடி வருகின்றனர்.