ஆர்.கே. நகர் பண வெள்ளம் பாய தொடங்கியது.. ரூ.7 லட்சம் பறிமுதல்: தேர்தல் அதிகாரி தகவல்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் விநியோகிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பணம் இதுவரை ரூ.7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்தார்.
சென்னை: ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த ரொக்கம் பணம் இதுவரை ரூ.7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்தார்.
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி தேர்தல் அலுவலர்களுக்கான கூட்டம் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்தில் பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
சுமார் 1638 தேர்தல் அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்துக்கு தேர்தல் பொதுப்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரவீண் பிரகாஷ், தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீண் நாயர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோரும் வந்திருந்தனர்.
ரூ.7 லட்சம் பறிமுதல்
இதுகுறித்து ஆர்.கே.நகரில் மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தெரிவிக்கையில், வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட இருந்த ரூ.7 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தலை முறையாக நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பறக்கும் படைகள்
தேவைப்பட்டால் பறக்கும் படை அதிகாரிகளை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பயிற்சிக் கூட்டங்களில் பங்கேற்காத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆர்.கே. நகரில் இதுவரை 82 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.
வாக்குச் சீ்ட்டு...
64 வேட்பாளர்கள் போட்டியிட்டால் ஒரு வாக்குப் பதிவு இயந்திரத்துக்கு 16 வேட்பாளர்களின் புகைப்படம், சின்னங்கள் பதிவு செய்யும் வீதம் 4 வாக்குப் பதிவு இயந்திரங்கள் போதுமானது. தற்போதைய நிலவரப்படி 82 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. எனவே வாக்குச் சீட்டு முறையில் வாக்குப் பதிவு நடத்த வாய்ப்புள்ளது.
இறுதி வேட்பாளர்களை பொருத்தே...
மேலும் வரும் 27-ஆம் தேதி வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளாகும். இதைத் தொடர்ந்து இறுதி வேட்பாளர்களின் பட்டியல் அன்று மாலை வெளியிடப்படும். இதில் இடம்பெற்றுள்ள எண்ணிக்கையை பொருத்தே வாக்குச் சீட்டு முறையா அல்லது வாக்குப் பதிவு இயந்திரமா என்பது உறுதியாக தெரியவரும் என்றார் அவர்.