விருதுநகர் அருகே பட்டப்பகலில் முத்தூட் நிறுவனத்தில் ரூ.92 லட்சம் மதிப்பிலான நகை கொள்ளை
விருதுநகர்: விருதுநகர் அருகே முத்தூட் ஃபினான்சில் கத்தி முனையில் 92 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை மர்ம நபர்கள் பட்டப்பகலில் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிலேயே மிக அதிக அளவில் தங்க நகைக் கடன்களை வழங்கும் நிறுவனமாக முத்தூட் பைனான்ஸ் விளங்குகிறது. அதன் கிளைகள் தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இயங்கி வருகிறது.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடியின் மையப்பகுதியில் முத்தூட் பினான்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. நேற்று மதிய உணவு இடைவேளையில் ஊழியர்கள், நிறுவனத்தின் உள்பகுதியில் உணவு உட்கொண்டு இருந்தனர்.
அப்போது நிறுவனத்திற்குள் புகுந்த 3 பேர் கொண்ட கும்பல், கத்தி முனையில் ஊழியர்களை ஒரு அறையில் வைத்து பூட்டினர். பின்னர் நிறுவனத்தில் இருந்த 92 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து பார்வையிட்டனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.