ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு: 6 பேரும் போட்டியின்றி தேர்வு?
சென்னை: மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.
அதிமுக சார்பில் தற்போதைய மாநிலங்களவை கட்சித் தலைவரான நவநீதகிருஷ்ணன், ரபி பெர்ணார்ட் மற்றும் பால் மனோஜ் பாண்டியன், காங்கிரஸ் கட்சியின் சுதர்சன நாச்சியப்பன், திமுகவை சேர்ந்த கே.பி.ராமலிங்கம் மற்றும் எஸ்.தங்கவேலு ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் 29ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் ஜூன் 11ம் தேதி அந்த ஆறு இடங்களுக்கான தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து மாநிலங்களை தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் நவநீதகிருஷ்ணன், வைத்திலிங்கம், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், விஜயகுமார் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். திமுக சார்பில் டி.கே.எஸ். இளங்கோவன், ஆலந்தூர் பாரதி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
கடந்த 24ம் தேதி முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து அந்த 6 பேரும் போட்டியின்றி மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.
தமிழ் மாநில காங்கிரஸில் இருந்து அண்மையில் அதிமுகவுக்கு வந்த எஸ்.ஆர். பாலசுப்பிரமணியனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.