டிரவுசர் கூடாது.. பேண்ட் போட்டுக்கிட்டா ஓ.கே.. ஆர்எஸ்எஸ் பேரணிக்கு சென்னை ஹைகோர்ட் நிபந்தனை!
சென்னை: தமிழகத்தில் பேண்ட் அணிந்தபடிதான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பேரணி நடத்த வேண்டும் என சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 14 இடங்களில் ஆர்எஸ்எஸ் சீருடை அணிவகுப்பு பேரணி நடத்திக்கொள்ள உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளது. அதில் முக்கியமான நிபந்தனை, கால் சட்டை அணியாமல் பேண்ட் போட்டுதான் பேரணி நடத்த வேண்டும் என்பதாகும்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் இணைச் செயலாளரான ஜோதீந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தி, அம்பேத்கரின் 126வது ஜெயந்தி மற்றும் விஜயதசமியை கொண்டாடும் வகையில் கோவை, திருச்சி, கன்னியாகுமரி, மதுரை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 14 இடங்களில் அக்டோபர் 9ம் தேதி ஆர்எஸ்எஸ் சார்பில் சீருடை அணிந்து அணிவகுப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம்.
ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற அணிவகுப்பை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நடத்தி வருகின்றனர். ஆனால், காவல்துறை கடைசி நேரத்தில் அனுமதி வழங்காமல் அனுமதி மறுத்து வருகின்றனர். எனவே, பேரணிக்கு அனுமதி அளிக்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி பி.ராஜேந்திரன் முன்பு அண்மையில் நடந்தது. அப்போது அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், உள்ளாட்சித் தேர்தல் நேரமாக இருப்பதால் பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டது. ஆர்எஸ்எஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், விஜயதசமி அன்றுதான் ஆர்எஸ்எஸ் இயக்கம் தொடங்கப்பட்டது. எனவே, அன்றைய தினம் பேரணி நடத்த அனுமதிக்காவிட்டாலும் வேறு தினங்களில் பேரணி நடத்த அனுமதிக்க வேண்டும் என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ''மக்களின் மத உணர்வை பாதிக்காத வண்ணம் ஆர்எஸ்எஸ் சார்பில் நவம்பர் 6 அல்லது நவ. 13 ஆகிய தேதிகளில் அணிவகுப்பு பேரணியை நடத்திக் கொள்ளலாம். பேரணியில் செல்பவர்கள் அரைக்கால் சட்டை அணியக்கூடாது. முழுக்கால் சட்டை அணிந்துதான் செல்ல வேண்டும்.
மேலும் பேரணியின்போது கையில் லத்தி போன்றவற்றை எடுத்துச் செல்லக் கூடாது. கூடாது. போலீஸார் விதிக்கும் நிபந் தனைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். எந்தவிதமான சட்டவிரோத நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது, என்ற நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு காக்கி வண்ண அரைக்கால் சட்டை அணிந்து அணி வகுப்பு நடத்துவதுதான் நீண்ட கால நடைமுறை என்பது குறிப்பிடத்தக்கது.