ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தைச் சேர்ந்த சூரப்பாவை அண்ணா பல்கலை. துணைவேந்தராக்குவதா? வேல்முருகன்
தமிழகக் கல்வி நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ்.,காரர்களை அனுமதிப்பது மிகவும் ஆபத்தானது என்று வேல்முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Recommended Video
சென்னை: கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பா என்கிற ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தைச் சேர்ந்த பேராசிரியரை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமித்து தமிழக கல்வி நிறுவனங்களில் வகுப்புவாதத்தை புகுத்தும் முடிவு என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் சாடியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கர்நாடகத்தைச் சேர்ந்த எம்.கே.சூரப்பாவை துணைவேந்தராக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்ததற்கு தமிழகத்தில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
தொடர்ந்து வெளிமாநிலத்தவர்களை துணைவேந்தராக்கும் ஆளுநரின் செயல் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பாமல் மெளனம் காப்பது ஏன் என்று வேல்முருகன் தனது அறிக்கையில் கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழர்கள் கொந்தளிப்பு
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே தங்களின் ஒட்டுண்ணி அரசியல் சித்தாந்தத்தை உயர்கல்வி நிறுவனங்கள் பலவற்றிலும் திணித்திருக்கும் பாஜக இன்று தமிழகத்திலும் அதனைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதன்படிதான் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக தங்கள் ஆர்எஸ்எஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை அதுவும் கர்நாடகத்தவராகப் பார்த்து நியமித்திருக்கிறார் ஆளுநர். இதை எப்படி அனுமதித்தார் எடப்பாடி பழனிசாமி என்பதுதான் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கேள்வி எழுப்புகிறது.
ஆர்.எஸ்.எஸ்.அழுத்தம்
பிறகு, இதற்காக தேடல் குழு (Search Committee) செயலில் இறங்கிவிட்டது என்று சொல்லப்பட்டது. அதையடுத்து, கடந்த மாதம் தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழக துணைவேந்தராக பிரமீளா குருமூர்த்தி நியமனம் செய்யப்பட்டார். யார் இந்த பிரமீளா குருமூர்த்தி என்று விசாரித்தபோதுதான் தெரிந்தது அவர் கேரளாவைச் சேர்ந்தவர்; மேல் வகுப்பினர்; அமெரிக்காவிலிருந்து ஆர்எஸ்எஸ் லாபி கொடுத்த அழுத்தத்தால் நியமிக்கப்பட்டவர் என்று தெரியவந்துள்ளது. முறைகேடாகவே இவர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
சட்டக்கல்லூரிக்கு ஆந்திராக்காரர்
இந்தப் பதவிக்குப் பொருத்தமும் தகுதியும் உடைய ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த புஷ்பவனம் குப்புசாமி புறக்கணிக்கப்பட்டிருக்கிறார். அடுத்து, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக தம்ம சூர்ய நாராயண சாஸ்திரி நியமிக்கப்பட்டார். இவர் ஆந்திராக்காரர். மேல்வகுப்பினர்தான். இவர் நியமிக்கப்பட்டதிலும் ஆர்எஸ்எஸ்தான் பின்னணியில் இருந்தது தெரியவந்தது. மேற்கண்ட இரண்டு நியமனங்களைவிடவும் அதிர்ச்சிகரமான தகவல் இன்று வந்தது.
அண்ணா பல்கலை., துணைவேந்தர்
அண்ணா பெயரிலான பல்கலைக்கழகத்திற்கு அவரது முற்போக்குத் தத்துவத்திற்கே நேர் எதிரான ஒரு பிற்போக்கு வகுப்புவாதியைப் போய் துணைவேந்தராக்கியிருக்கிறாரே ஆளுநர் என்று எதிர்க் குரல் எல்லாப் பக்கமிருந்தும் ஒலிக்கிறது. ஏன் இவர்கள் திட்டமிட்டு வெளிமாநிலத்தவர்களாக, அதுவும் இந்த அறிவியல் காலத்திற்கே தொடர்பில்லாத ஆர்எஸ்எஸ்காரர்களாகப் பார்த்து துணைவேந்தர்களாக நியமிக்கிறார்கள்?
கர்நாடக சட்டசபைத் தேர்தல்
இதுதான் ஒட்டுண்ணி அரசியல் சித்தாந்தம் என்பது. பிறர் உழைப்பில்தான் வாழ்வர்; பிறர் தோளில்தான் குந்துவர்; சொந்தக் காலில் நிற்க முடியாதவர் பின் என்ன செய்வர்? தமிழ்நாட்டில் இந்தப் பதவிக்கு யாருமே தேறமாட்டார்கள் என்பது போல் கர்நாடகத்துக்காரரை ஆளுநர் பிடித்துவந்ததற்குக் காரணம் உண்டு. கர்நாடகத் தேர்தலுக்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததோடு, ஒரு கர்நாடகத்தவரையே தமிழ்நாட்டில் துணைவேந்தராக்கியிருக்கிறோம் பாருங்கள் என்று சொல்லி ஓட்டுக் கேட்கவே தமிழகத்துக்கு இந்தக் கேட்டைச் செய்திருக்கிறார் ஆளுநர்.
தமிழ்ச்சமூகத்திற்குள் வகுப்புவாதம்
இப்படிச் செய்ததன் மூலம் மாநில உரிமைக்கும் சமூக நீதிக்கும் மாநில ஆளுநரே பங்கம் ஏற்படுத்தியிருக்கிறார். உயர்கல்வி நிறுவனங்களில் துணைவேந்தர்களாக ஆர்எஸ்எஸ்காரர்களை நியமிப்பதென்பது, கல்வியை காவிமயமாக்குவதும், தமிழ்ச் சமூகத்திற்குள் வகுப்புவாத வலுசர்ப்பம் படமெடுத்தாட மகுடி வாசிப்பதுவுமாகும். ஆனால் இதை எப்படி அனுமதிக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்பதுதான் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கேள்வியாக இருக்கிறது என்று அந்த அறிக்கையில் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.