ரூ. 570 கோடி விவகாரம்... பணத்தை எண்ணும் வீடியோக் காட்சிகளை ஆர்.டி.ஐ மூலம் பெற்ற நெல்லை வக்கீல்
சென்னை: சட்டசபைத் தேர்தலின் போது திருப்பூர் அருகே ரூ. 570 கோடி பிடிபட்டது தொடர்பான வீடியோவை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நெல்லை வழக்கறிஞர் பிரம்மா என்பவர் பெற்றுள்ளார்.
கடந்த மே மாதம் 13ம் தேதி திருப்பூரை அடுத்த பெருமாநல்லூரில் வாகனச் சோதனையின் போது 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 570 கோடி பிடிபட்டது. இந்த பணம் கோவையில் இருந்து விசாகப்பட்டிணத்திற்கு கொண்டு செல்லப்பட்ட தங்களுடையது என எஸ்.பி.ஐ. வங்கி தெரிவித்தது.
ஆனபோதும், சட்டசபைத் தேர்தல் நேரத்தில் பிடிபட்ட பணம் என்பதால், இந்த விவகாரத்தில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டது.
இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது திமுக. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையே உயர்நீதிமன்ற உத்தரவின்படி பிடிபட்ட பணத்தை வருவாத்துறை அதிகாரிகள் கோவைக்கு எடுத்துச் சென்று எண்ணினர். இதில் 570 கோடி இருப்பது உறுதியானது.
இந்த பணத்தை எண்ணுவது தொடர்பான வீடியோ காட்சிகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா என்பவர் பெற்றுள்ளார். ஆனால், தனக்கு அளிக்கப்பட்ட வீடியோவில் பல்வேறு தகவல்க மறுக்கப்பட்டிருப்பதாகவும், எனவே மீண்டும் மனு செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து அவர் கூறுகையில், "கண்டெய்னரில் இருந்த பெட்டிகளை எப்படி உடைத்தார்கள் என்பதை சிடியில் கொடுத்துள்ளனர். அதைத்தவிர நான் கேட்ட தகவல்களில் பெரும்பலான தகவல்களை மறுத்துள்ளார்கள். ஓட்டுநர் உரிமம், ஆர்.சி. புக், டிரிப் சீட், எங்கிருந்து எந்த தேதியில் புறப்பட்டது என்ற கேள்விக்கு இல்லை என்று மறுத்துள்ளனர்.
இதில் எனக்கு முழு தகவல் கிடைக்காததால், மீண்டும் மனு செய்ய உள்ளேன். அதில் முழு தகவலும் கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்த விவகாரத்தில் நாட்டு மக்கள் முழுமையாக தெரிய வேண்டும் என்பதால்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெற்றுள்ளேன்" என்கிறார்.